நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை… மற்றொருவருக்கு அரிவாள் வெட்டு…!!

Author: Babu Lakshmanan
20 April 2022, 11:40 am
Quick Share

திண்டுக்கல் ஏர்போர்ட் நகர் அருகே நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற புது மாப்பிள்ளை வெட்டிப்படுகொலை‌ செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அனுமந்த நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் திமுக பிரமுகர் என்று சொல்லப்படுகிறது. இவருடைய மகன் பிரபாகரன். தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 15 நாட்கள் மட்டுமே ஆகிறது. இவருக்கு தென்றல் என்ற மனைவி உள்ளார்.

இந்த நிலையில் திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உள்ள ஏர்போர்ட் நகர்ப்பகுதியில் சூர்யா என்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரபாகரன், கார்த்தி, குணசேகரன் ஆகியோர் ஒன்று கூடி உள்ளனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரபாகரனை சரமாரியாக வெட்டி உள்ளது.

இதை தடுக்க முயன்ற கார்த்திக் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளனர்.

தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர். வெட்டுப்பட்ட கார்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் முடிந்த 15 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Views: - 684

0

0