வீடு கட்ட அப்ரூவல் வேணும்னா 1 லட்சம் கொடு… இல்ல இடத்தை எழுதி கொடு… திமுக ஏம்எல்ஏவுடன் சேர்ந்து பஞ்சாயத்து தலைவர் மிரட்டுவதாக தாயுடன் நபர் தர்ணா..!!

Author: Babu Lakshmanan
11 April 2022, 7:16 pm
Quick Share

வீடு கட்டுவதற்கு அப்ருவல் வழங்க லஞ்சம் கேட்டு மிரட்டும் திமுக பஞ்சாயத்து தலைவர் மற்றும் திமுக எம்எல்ஏவிடம் இருந்து தங்களைக் காப்பாற்றக்கோரி தாயுடன் நபர் ஒருவர் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது அலுந்தலைப்பூர் கிராமம். அக்கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்ராஜ். இவர் தனது தாயார் சரஸ்வதியுடன் 35 ஆண்டுகளாக டீ கடை வைத்து நடத்தி வருகிறார். ஊராட்சித் தலைவருடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அந்த டீக்கடையினை இடித்துவிட்டதாக மிரட்டி வருகிறார்.

மேலும் தங்களுக்குச் சொந்தமான இரண்டே முக்கால் சென்ட் இடத்தில் வீடு கட்டுவதற்காக அப்ரூவல் கேட்டும் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் ஜெயராமன், ஒன்றிய தலைவர் ரஷ்யா ராஜேந்திரன் ஆகியோரிடம் பலமுறை மனுஅளித்தும், அப்ரூவல் தராததால் தங்களுக்கு நியாயம் வழங்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அரவிந்ராஜ், அவரது தாயார் சரஸ்வதி கூறியதாவது :- முதலமைச்சர் முதல் பிரதமர் வரை சென்றாலும் அப்ரூவல் பெறமுடியாது. அப்ரூவல் வழங்க ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். ரூ.50 ஆயிரம் அப்ரூவலுக்கும், ரூ.50 ஆயிரம் அவர்களுக்கு கமிஷனாகவும் கேட்கின்றனர். இது பற்றி கேட்டால், கலெக்டர் வரை கட்டிங் கொடுக்க வேண்டும். அதனால் பணம் கொடுத்தால் தான் வீடு கட்ட அப்ரூவல் தர முடியும். இல்லாவிட்டால் இடத்தை விட்டுக் கொடுத்து விட்டு சென்றுவிடு, இல்லையென்றால் கொன்று விடுவோம் எனவும் மிரட்டுகின்றனர்.

இதுகுறித்து லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனிடம் புகார் அளித்தும், இடத்தை கொடுத்துவிட்டு செத்துவிடு, இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என எம்எல்ஏ மிரட்டுகிறார். அமைச்சர் கே.என் நேருவிடம் முறையிட முயன்றும் தங்களை சந்திக்க நேரமில்லையென்று தெரிவிக்கிறார்.

மேலும், நாங்க செத்தாலும் பரவாயில்லை. தங்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர கோரி இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளோம். உரிய நடவடிக்கை இல்லை என்றால் நாங்கள் சாவதைத் தவிர வேறு வழியில்லை, என தெரிவிக்கின்றனர்.

Views: - 937

0

0