தம்பியை தீவைத்து எரித்துக் கொன்ற அண்ணன் கைது… தென்னையை விற்றதால் ஆத்திரம்…!!

Author: Babu Lakshmanan
18 April 2022, 12:10 pm
Quick Share

கன்னியாகுமரி : நித்திரவிளை அருகே குடும்ப தகராறில் தம்பியை எரித்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் ரெஜி என்ற டென்னீஸ் (54). இவரது தம்பி பிரைட்(45). இருவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரது மனைவிகளும் இவர்களை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் அண்ணன் – தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு வீட்டின் முன் நின்ற 3 தென்னை மரங்களை பிரைட் விற்று விட்டாராம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு மரத்தை விற்க பிரைட் முயற்சித்தாராம். இதனால் அண்ணன் – தம்பிக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் மாறிமாறி தாக்கி கொண்டனர். இதில் தம்பி பிரைட் மயங்கி வீட்டுக்குள் விழுந்தார். அப்போது, டென்னீஸ் அவரை வீட்டின் வெளியே இழுத்து போட்டு ஸ்டவ்வில் இருந்த மண்ணெண்ணையை பிரைட் மீது ஊற்றி தீ வைத்தார்.

தீயில் கருகிய அவரை யாரும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை. இதனால் பிரைட் இன்று காலை பரிதாபமாக இறந்து விட்டார். தகவலறிந்த நித்திரவிளை போலீசார் விரைந்து சென்று பிரைட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரைட்டின் அண்ணன் டென்னீசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 1024

0

0