கழிப்பறை இல்லாததால் ஏரி கரை பக்கம் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி… இருதரப்பினரிடையே வெடித்த மோதல் ; கூண்டோடு தூக்கிய போலீசார்!!

Author: Babu Lakshmanan
27 April 2023, 1:10 pm
Quick Share

திருவள்ளூர் ; பெரியபாளையம் அருகே தனியார் செங்கல் சேம்பரில் கழிப்பிடம் இல்லாமல் ஏரி கரைக்கு சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் மனோகர் என்பவருக்கு சொந்தமான தனியார் செங்கல் சேம்பர் இயங்கி வருகிறது. இதில் வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் விழுப்புரம் மாவட்டம் குளிச்சலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், தனது மனைவி உண்ணாமலை ஆகியோர் செங்கல் சேம்பரில் கடந்த சில வருடங்காளாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது பொதுத் தேர்வு முடிந்து விடுமுறை காரணமாக தனது பெற்றோர்களை பார்க்க சிறுமி தனியார் செங்கல் சேம்பருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் செங்கல் சேம்பரில் போதிய கழிவறை இல்லாததால் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே சிறுமி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே செங்கல் சேம்பரில் பணிபுரியும் திருவண்ணாமலை மாவட்டச் சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரின் மகன் பிரவீன்ராஜ் (25) சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

அப்போது சிறுமி அங்கிருந்து தப்பி சென்று நடந்ததை பெற்றோர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து, சிறுமியின் உறவினர்கள் பிரவீன் ராஜை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்காமல் விட்டுவிட்டனர்.

இதில் காயமடைந்த பிரவீன்ராஜ் செங்குன்றம் அடுத்த பூச்சி அத்திப்பேடு பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களை வரவழைத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் சிறுமியின் தந்தை வெங்கடேசன் மற்றும் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்றப்பட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக ஆரணி போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெங்கடேஷ் அவர்களது தரப்பில் சதீஷ், மூர்த்தி, குமார் ஆகிய நான்கு பேர் மீதும் அடிதடி வழக்கு பதிவு செய்தனர். மேலும் , பிரவீன்ராஜ், கிருஷ்ணன், மணிராஜ், ஜான் பீட்டர் மீதும் அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

7 பேரையும் கைது செய்து விசாரணைக்கு பின்னர் பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பிரவின்ராஜ் மீது ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Views: - 297

0

0