கோவை அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் சார்பில் மருத்துவ உபகரணங்கள்
28 September 2020, 2:15 pmகோவை : ரோட்டரி கிளப் ஆஃப் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளுக்கான வெண்டிலேட்டர் கருவிகள் உட்பட ரூ. 53 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கொரோனா அச்சுறுத்தல் உள்ள இந்த காலகட்டத்தில் மூச்சுத்திணறலுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளுக்கு வெண்டிலேட்டர் கருவியை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஜெனித் அமைப்புகள் இன்று வழங்கின.
மேலும், கோவை அரசு மருத்துவமனையின் மயக்கவியல் துறைக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக அறுவை சிகிச்சை கூடங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் என மொத்தம் ரூ.53 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான கருவிகளை மருத்துவமனை டீன் காளிதாசிடம் வழங்கப்பட்டன.
இதுகுறித்து டீன் காளிதாஸ் கூறுகையில், “கோவை அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் மூலமாக குழந்தைகளுக்கான வெண்டிலேட்டர் வழங்கப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் பிரச்சனையுடன் இம்மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளுக்கு இந்த வெண்டிலேட்டர் நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.
கொரோனா நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய பிரத்யேக கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான இயந்திரங்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன.
இம்மருத்துவமமைக்கு நோயாளிகள் எந்த நிலையில் வந்தாலும் அவர்களுக்கு தொடர்ந்து அனைத்து வித சிகிச்சையும் வழங்கப்படுகிறது.” என்றார்.
இதுகுறித்து ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் கோவிட் பாதுகாப்புத் திட்ட தலைவர் காட்வின் மரிய விசுவாசம் கூறுகையில், சுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் இயந்திரங்கள், மயக்கவியல் துறைக்கு தேவையான இயந்திரங்கள், நோயாளிகள் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வகையான இயந்திரங்களை இன்று வழங்கியுள்ளோம். இவை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள்.
தேவை என்று மருத்துவர்கள் கேட்டனர், அதன்படி உதவி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்க்ய் ரோட்டரி கிளப் ஜெர்மன் டவுன் உதவியுள்ளது. தமிழ்ச்சங்கம் மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளது.” என்றார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பூமா, நர்மதா மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.