ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 மாதங்களாக NCDs மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு.. நோயாளிகள் பெரும் அவதி ; நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத்துறை..?

Author: Babu Lakshmanan
12 October 2022, 5:58 pm
Quick Share

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் கடந்த மூன்று மாத காலமாக தொற்றாத நோய்க்கு அளிக்கப்படும் மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

NCDs எனப்படும் தொற்றாத நோய்கள் பாதிப்பால் உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 41 மில்லியன் மக்கள் புற்றுநோய்கள், இருதய நோய்கள், நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கருதபடுவது என்வென்றால், அதிக புகையிலை பயன்பாடும், உடல் உழைப்பின்மையால் அதிகரிக்கும் கெட்ட கொழுப்புகள், ஆல்கஹால் மற்றும் ஆரோக்கியமற்ற தீங்கு விளைவிக்கும் உணவுகளாலும் தான் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

தொற்றாத நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து, பின்னர் நோய்த்தடுப்பு சிகிச்சை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரை மருந்துகளை தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து அளிக்க அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் மற்றும் துணை மையங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது.

kanjipuram hospital - updatenews360

காஞ்சிபுரம் சுகாதார மாவட்டத்தில், 38 ஆரம்ப சுகாதார நிலையம், 198 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. காஞ்சிபுரம் நகரில் பஞ்சுப்பேட்டை, பிள்ளையார்பாளையம், செவிலிமேடு ,சின்ன காஞ்சிபுரம், திருப்புட்குழி என ஐந்து ஆரம்ப சுகாதார மையங்களும் வாலாஜாபாத் வட்டத்தில் பரந்தூர், அவளூர், கீழ் பேரணமல்லூர் என 3 சுகாதார மையங்களும், உத்திரமேரூர் வட்டத்தில் உத்திரமேரூர், மானாம்பதி,களியாம்பூண்டி, சாலவாக்கம் ,குறும்பறை, படூர் என 6 ஆரம்ப சுகாதார நிலையங்களும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மதுரமங்கலம், வல்லம், பண்ருட்டி உள்ளிட்ட நான்கு மையங்களும் செயல்பட்டு வருகின்றது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும். ஆனால் பல ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் பணிக்கு செல்வதே இல்லை. சென்றாலும் ஒரு சில மணித்துளிகள் மட்டும் இருந்து விட்டு தங்களுடைய சொந்த கிளிக்கு சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. பல துணை சுகாதார நிலையங்களில், செவிலியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். மேலும் மருந்து மாத்திரைகளை வழங்க பார்மசிஸ்ட் இல்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்கிறது.

kanjipuram hospital - updatenews360

கர்ப்பிணிப் பெண்களின் பராமரிப்பில் மட்டுமே செவிலியர்கள் கவனம் செலுத்துவதால் தொற்றாநோய்க்கு உண்டான மாத்திரைகளை வழங்குவதில்லை. கேட்டால் “சுகர், ரத்த அழுத்தம்” உள்ளிட்ட மாத்திரைகள் இல்லை. அரசு தலைமை மருத்துவமனையில் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறி விடுகின்றனர் என நோயாளிகள் புலம்புகின்றனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தொற்ற நோய்களுக்குண்டான மாத்திரைகளை வாங்குவதற்காக பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இங்கு வந்து குவிகின்றனர்.

ஆரம்ப சுகாதார மையங்களில் மாத்திரைகள் வாங்கிக் கொள்ளாமல் இங்கு ஏன் வருகின்றீர்கள் என நமது செய்தியாளர் கேட்டபோது , “ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த மூன்று மாதமாக பிபி மாத்திரைகள், சுகர் மாத்திரைகள், இருதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் இல்லை என கூறுகின்றார்கள்.

kanjipuram hospital - updatenews360

மேலும் சில நிலையங்களில் உள்ள மாத்திரைகள் மற்றொரு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பதில்லை. இதேபோல், பத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் சர்க்கரை நோய், இருதய நோய், ரத்தக்கொதிப்பு போன்ற தொற்றா வியாதிகளுக்கு உண்டான மாத்திரைகள் சரிவர அளிப்பதில்லை என்றும், மேலும் ஒன்று இருந்தால் ஒன்று இல்லை என்ற கணக்கிலேயே ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது என்றும் கூறுகின்றனர். அதனால் தான் நாங்கள் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து மாத்திரைகளை வாங்கிக் கொள்கின்றோம்,” என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

1 HEART TABLET
Tab. Isodril
Tab. Cloplet
Tab. Atrovastin
Tab. Lasix
Tab. Aspirin

kanjipuram hospital - updatenews360
  1. SUGAR TABLET
    Tab. Metformin
    Tab. Glimipride
    Tab. Glibenclamide
    Tab. Glipizide
  2. BB TABLET
    Tab. Losaratin
    Tab. Amlong
    Tab. Nifidipine
    உள்ளிட்ட மாத்திரைகளில் அவ்வப்போது பல மாத்திரைகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த ஐந்து மாதமாக நிலவி வருகின்றது என மருத்துவமனை வட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதே போல் தான் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் கொஞ்சம் கூட செயல்படுவதில்லை. எங்கள் பகுதிக்கே அவர்கள் வருவதே இல்லை. வந்தாலும் மாத்திரைகள் இல்லை என தெரிவிக்கின்றனர் எனவும் நோயாளிகள் புலம்புகின்றனர்.

அரசு தலைமை மருத்துவமனையில் கூட கடந்த 4 மாத காலமாக Hydroxy chloroquine என்ற முடக்கு வாதம் மாத்திரை இல்லை. மருத்துவமனை நிர்வாகம் பணம் சம்பாதிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளதால் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளையோ வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை என்ற குற்றச்சாட்டம் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது.

Views: - 408

0

0