பிரதமர் மோடியை உலகமே உற்றுப் பார்க்கிறது.. அடுத்த 25 ஆண்டுகள் ரொம்ப முக்கியம் : மத்திய அமைச்சர் எல்.முருகன்

Author: Babu Lakshmanan
21 January 2023, 6:12 pm
Quick Share

நெல்லை : உலகத்தை இந்தியா ஆண்டு கொண்டு இருப்பதாகவும், தேசிய கல்விக் கொள்கை தாய் மொழியை ஊக்குவிக்கிறது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நெல்லையில் நடைபெற்ற ஏபிவிபி மாநில மாநாட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசினார்.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பின்(ஏபிவிபி) 28வது மாநில மாநாடு வையத்தலைமை கொள்ளும் சுயசார்பு பாரதம் என்ற தலைப்பின் கீழ் நெல்லை சந்திப்பில் உள்ள சங்கீத சபாவில் இன்று தொடங்கியது. மாநாட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

மாநாட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:- கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. உலகத்தின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இந்திய பிரதமர் என்ன சொல்கிறார் என்பதை உலகம் உற்று நோக்குகிறது. உக்ரைன் போர் முனையில் இருந்து 20,000 மாணவர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளோம். இதன் மூலம் அந்நாடுகளுடன் எந்த அளவுக்கு உறவு வைத்துள்ளோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் தேச தலைவர்கள் மூலம் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். கடந்த எட்டு ஆண்டுகளில் இங்கிலாந்தை பின் தள்ளி பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது தேசமாக வந்துள்ளோம். இதற்கு சுயசார்பு பாரதம், மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் தான் காரணம். நாம் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறோம். உலகம் இந்தியாவை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது.

உலக அளவில் அதிக மனிதவளம் கொண்ட நாடு இந்தியா. எனவே, இளைஞர்களின் திறனை வளர்த்து கொள்ள ஸ்கில் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது. உலகிலேயே 80 ஆயிரம் ஸ்டாட்அப் கம்பெனிகள் இருக்கும் நாடு நமது நாடு தான். ஹாலிவுட் படங்கள் இன்று பெங்களூர் சென்னையில் எடுக்கின்றனர். அந்த அளவுக்கு நாம் முன்னேறி கொண்டிருக்கிறோம்.

எனவே கர்வம் கொள்வோம், ஒரே நாடு ஓரே பாரதம், நாம் வேறு வேறு மொழிகள் பேசினாலும், நம் கலாச்சாரம், பண்பாடு ஒன்று தான் என்பதை விளக்கும் விதமாக, காசி தமிழ் சங்கம் நடைபெற்றது. தேசிய கல்வி கொள்கை 2020ல் கொண்டு வந்தோம். இதுகுறித்து பெரிய பெரிய கல்வியாளர்களிடம் ஆலோசித்தோம். சிறந்த கல்வி கொள்கை தாய் மொழியை ஊக்குவிக்கிறது. அது தமிழாக இருக்கலாம், தெலுங்காக இருக்கலாம். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறந்த தொழில்நுட்பாளர்களை உருவாக்கும் கொள்கை திறமையை வளர்த்து கொள்ள தேசிய கல்வி கொள்கை வழி செய்கிறது. 2047ல் நாம் 100வது சுதந்திர தினம் கொண்டாடுவோம். அப்போது, நாடு எப்படி இருக்க வேண்டுமென என தீர்மானிக்க, இப்பவே அடித்தளம் இட்டு வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகளை, நீங்கள் தான் ஆளப்போகிறீர்கள். எனவே 25 ஆண்டுகள் நமக்கு மிகவும் முக்கியமானது. அனைவரும் இணைந்து அனைவரது வளர்ச்சிக்காக பங்களிக்க வேண்டும், என்று பேசினார்

Views: - 247

0

0