பால் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை : அமைச்சர் நாசர் எச்சரிக்கை!

Author: Babu Lakshmanan
19 August 2022, 2:35 pm
Quick Share

பால் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக விற்றால் கடும் நடவடிக்கை அமைச்சர் ஆவடி நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆவினில் 10 புதிய பொருட்களை சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் விற்பனையை தொடங்கி வைத்தார்.

  1. பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream) 125மி.லி – 45 ரூபாய்
  2. வெள்ளை சாக்லேட் (White Chocolate ) – 45 கிராம் – ரூ.30
  3. குளிர்ந்த காஃபி (Cold Coffee) – 200 மி.லி – ரூ.35
  4. வெண்ணெய் கட்டி (Butter Chiplets) – 200 கிராம் – ரூ.130
  5. பாஸந்தி (Basundi) – 100 மி.லி – ரூ.60
  6. ஆவின் ஹெல்த் மிக்ஸ் (Aavin Health Mix) – 250 கிராம் – ரூ.120
  7. பாலாடைக்கட்டி (Processed Cheese ) – 200 கிராம் – ரூ.140
  8. அடுமனை யோகர்ட் (Baked Yoghurt) – 100 கிராம் – ரூ.50
  9. ஆவின் பால் பிஸ்கட் (Aavin Milk Biscuit) -75 கிராம் – ரூ.12

10.ஆவின் வெண்ணெய் முறுக்கு (Aavin Butter Murukku ) – 200 கிராம் – ரூ.80

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 36 அறிவிப்புகளில் 20 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அறிவிப்புகளில் ஒன்றான புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் மாதத்திற்கு 2 கோடி ரூபாய் லாபத்தை எதிர்பார்க்கிறோம், எனவும் கூறினார்.

மேலும், ஆவின் குடிநீருக்கு முதலமைச்சர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என கூறிய அவர், இது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும், புதிய பொருட்கள் தயாரிப்பதன் மூலம் பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாகவும், நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டரில் இருந்து 41 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது என்றும், பால் விலையை குறைத்ததன் மூலம் நாளொன்றுக்கு 85 லட்சம் நஷ்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆயுத பூஜை இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் தொடங்கி வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தனியார் பால் விலை ஏற்றத்தின் மூலம் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம் உள்பட இதர விளம்பரங்கள் இடம் பெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும், விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பால் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை செயலாளர் கார்த்திக், மேலாண் இயக்குனர் சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்

Views: - 455

0

0