ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய்… அண்ணாமலையின் கோரிக்கை விரைவில் பரிசீலனை : அமைச்சர் சக்கரபாணி!!

Author: Babu Lakshmanan
7 January 2023, 7:43 pm
Quick Share

கோவை ; விரைவில் கண் விழித்திரை மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் உள்ள நியாய விலை கடையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது, பொங்கல் சிறப்பு பரிசு பொருட்களான பச்சரிசி சர்க்கரை மற்றும் கருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கடைகளுக்கு தேவையான மற்றும் சிறப்பு பரிசுகள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வந்துள்ளதா..? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வை தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது :- தமிழக முதல்வர் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பாக தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் ரூபாய் ஆயிரம் ரொக்க பணமும், ஒரு கிலோ பச்சை அரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்குவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாளை மறுதினம் ஒன்பதாம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு 9,10,12,12 ஆகிய நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர் ஒன்பதாம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அதே நாளில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது. அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். வாங்க முடியாத நபர்கள் வாங்குவதற்காக 14ஆம் தேதி சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் 11 லட்சத்து 255 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மொத்தம் 1404 நியாய விலை கடைகள் உள்ளது.

கோவை மாவட்டத்தில் 100% பொங்கல் பரிசு தொகுப்புகள் வந்துவிட்டது. கரும்புகள் மட்டும் 90% வந்துள்ளது. தமிழக முதல்வரை பொறுத்தவரை தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றி வருகிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு சிறப்பு பொது நுகர்வு விநியோகத் திட்டத்தை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள் தான்.

அன்றைக்கு அனைவருக்கும் புரதச்சத்து கிடைக்க வேண்டுமென துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா என அனைத்தும் கலைஞர் கொடுத்தார். ஆனால் கடந்த ஆட்சியில் இரண்டு பொருட்களை நிறுத்திவிட்டனர். தற்பொழுது மக்கள் அனைவருக்கும் புரதச்சத்து கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்றுதான், இன்றைக்கு துவரம் பருப்பு பாமாயில் சர்க்கரை எல்லாம் வழங்குகின்றோம்.

தேங்காய் எண்ணெய் கிடைக்க வேண்டும் என்று அண்ணாமலை மற்றும் விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல கோவை மாவட்ட ஆட்சியரும் தேங்காய் எண்ணெய் நியாய விலை கடைகளில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளது. இதை நிச்சயமாக, தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வருங்காலத்தில் நியாய விலை கடைகளில் கிடைக்க வழிவகை செய்ய முயற்சி மேற்கொள்வேன். தற்பொழுது கேழ்வரகு, தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் 3572 ரூபாய்க்கு வாங்கி வருகின்றோம். இவற்றை விரைவில் முன்னோட்டமாக தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அரிசிக்கு பதிலாக கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாமக ராமதாஸ் அரசு அதிகாரிகளை வைத்து கரும்பை முறையாக கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தது 5 அடி கரும்பையாவது கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்பொழுது நீங்கள் பார்த்திருப்பீர்கள். கரும்பு எத்தனை அடி உள்ளது என்று, இதை நீங்களே ஆழ்ந்து பார்த்து கூறுங்கள். கடந்த ஆட்சியில் என்ன கொடுத்தார்கள். ஒரு முழு கரும்பை கொடுத்தார்களா, மூன்றாக வெட்டித்தான் கொடுத்தார்கள்.

இன்றைக்கு முழு கரும்பு கொடுக்கின்றோம். அதை நீங்கள் பாராட்ட வேண்டும் அல்லவா..? கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடியார் முதல்வராக இருந்தார். அதற்கு முன்பு அந்த அம்மையார் 6 ஆண்டுகளாக முதல்வராக இருந்தார்கள். என்றைக்காவது முழு கரும்பை கொடுத்தார்களா..? என்பதை பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகின்றேன்.

நியாய விலைக் கடைகளில் கயிறாக வைப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் விவசாய வேலை செய்து வருவார்கள். மாற்றுத்திறனாளிகள் கைரேகை வைப்பதில் சிக்கல்கள் உள்ளது. அதை தவிர்க்க நடவடிக்கை எடுத்து இன்றைக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் நியாய விலை கடைகளிலும், இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

குறிப்பாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மற்றும் பெரம்பலூரில் முன்னோட்டமாக கண் விழித்திரை மூலம் நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு சோதனை அடிப்படையில் முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

Views: - 453

0

0