கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்க முடிவா…? சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

Author: Babu Lakshmanan
22 March 2022, 7:14 pm
Quick Share

தமிழகத்தில் இன்னும் 51 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்

சென்னை ஜாபர்கான்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை தொடக்கம் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த பின் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- 10ம் வகுப்பில் 100 சதவீதம் வெற்றியை கொடுத்த பள்ளிகளில் இதுவும் ஒன்று. மேல் நிலை பள்ளியாக்க வேண்டும் என்று பல நாட்களாக கேட்டு வரும் நிலையில், போதிய இடம் இல்லாததால் அது முடியவில்லை. ஆனால் இன்று 187 லட்சத்தில் 12 வகுப்பறைகள் கழிவறையுடன் தொடக்கம் பள்ளி கட்டிடம்
கட்டப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 39 பள்ளிகளுக்கு தரம் உயர்த்த திட்டமிட்டு இருக்கிறோம். 126 கோடி ரூபாயில் இதன் பணி நடைபெற்று வருகிறது. விரையில் அது மாணவர்கள் பயன்பாட்டிற்கு வரும்.

தமிழகத்தில் மொத்தமாக 12-14 வயதுடைவர்கள் 21.21 லட்சம் பேர் உள்ள நிலையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 6,29,100 (29.66%) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல, 15-18 வயதுடையவர்களில் 28.37 லட்சம் பேருக்கு (84.81%) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4 ஆம் அலை வருமா, வராதா என்று தெரியவில்லை. ஆனால், தேவையான நடவடிக்கை அனைத்தையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் 22 மாவட்டத்தில் கொரொனா பாதிப்பு 0 யாக உள்ளது. அதேபோல கடந்த 10 நாட்களாக இறப்பு எண்ணிக்கையும் 0 யாக உள்ளது. பொதுமக்கள் தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என அலட்சியமாக இருக்கக்கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்த 3 மாதத்திற்கு தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மேலும், அருகே இருக்கும் மாநிலங்கள், நாடுகளில் தோற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் இன்னும் 51 லட்சம் பேர் தற்போது வரையும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கிறார்கள். அதேபோல 1.32 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்கள் குறித்து முதல்வர் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார், எனக் கூறினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Views: - 742

0

0