களைகட்டும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ; காளி வேடம் அணிந்து வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்கள்…!!

Author: Babu Lakshmanan
4 October 2022, 5:16 pm
Quick Share

உலகப்புகழ்பெற்ற குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா களைகட்டி வரும் நிலையில், பல்வேறு வேடங்கள் அணிந்த பக்தர்கள் வீடு வீடிகாகச்சென்று காணிக்கை பெற்று வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ ஞானமூர்த்திஸ்வர சமேத முத்தாரம்மன் கோவிலில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் தசரா திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

தொடர்ந்து பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றுவரும் திருவிழாவில் நாள்தோறும் அம்பாளுக்கு பல்வேறு விதமான அபிஷேகங்கள் தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும், நாள்தோறும் இரவில் அம்பாள் பல்வேறு விதமான திருக்கோளங்களில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தசரா திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தசரா திருவிழா களை கட்டி இருக்கிறது.

தசரா திருவிழாவின் 9ம் திருநாளான இன்று மாலை அணிந்து காப்பு கட்டிய பக்தர்கள் காளி வேடம் ,அம்மன் வேடம் , ராஜா ராணி வேடம், ஆஞ்சநேயர் வேடம் மற்றும் பெண் வேடம் உள்ளிட்ட பல்வேறு விதமான வேடங்கள் அணிந்து பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காணிக்கை பெற்று வருகின்றனர். மேலும் நீதிமன்றம் கட்டுப்பாடுகளின் படி சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்காரம் வரும் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த சூரசம்காரம் நாளில் வேடங்களில் அணிந்து பெரும் காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். தசரா திருவிழா நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் உற்சாகத்துடன் வேண்டுதல்களை நிறைவேற்றி வருவதால் தசரா திருவிழா களைகட்டி வருகிறது.

Views: - 353

0

0