கூலித்தொழிலாளி வீட்டிற்கு தீ வைத்த மர்மநபர்கள்! பெண்கள் அலறியடித்து ஓட்டம்.!!
16 August 2020, 11:35 amதருமபுரி : மாரண்டஹள்ளி அருகே கூலி தொழிலாளி வீட்டிற்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பெண்கள் உயிர் தப்பினர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி அருகே உள்ள காடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சின்னசாமி மகன் முருகன் என்பவர் தமிழக அரசு வழங்கிய பசுமை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் முருகன் கூலி வேலைக்காக வெளியூர் சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் முன்புறமுள்ள கதவிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் திடீரென புகை மற்றும் நெருப்பு பிளம்பு வந்ததையடுத்து அலறி அடித்துக்கொண்டு வீட்டிலிருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டுள்ளனர்.
பெண்களின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் தீயை அணைத்தனர். மேலும் வீட்டில் நான்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருடைய குடிசை வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது குறிப்பிடத்தக்கது. மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் இக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.