பட்டதாரி இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை… பற்றி எரியும் நாமக்கல்… குடியிருப்புகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. பின்னணியில் பகீர்..!!

Author: Babu Lakshmanan
15 May 2023, 8:13 pm
Quick Share

ஜேடர்பாளையம் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வடமாநில இளைஞர்கள் மீது தீவைப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் 11ஆம் தேதி 27 வயது பட்டதாரி இளம் பெண் ஓடை அருகே ஆடு மேய்க்க சென்ற போது, மாலை நேரத்தில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் 17 வயதே ஆன வடமாநில சிறார் ஒருவரை கைது செய்தனர்.

நித்யாவின் கொலை வழக்கில் மேலும் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என நித்தியாவின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் இரண்டு மாத காலங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெருமாள் தலைமையில் விவசாய பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்ற முழக்கங்களுடன், பல்வேறு போராட்டங்கள் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்தன.

இது தொடர்பாக ஊருக்குள் உள்ள இருதரப்பினர் இடையே ஒரே நேரத்தில் மாற்றி மாற்றி பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளி வாகனம் ஒன்று ஐந்து நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தீயிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதேபோன்று சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்டம் ஒழுங்கு காரணமாக 200க்கும் மேற்பட்ட போலீசார் ஜேடர்பாளையம் பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

200க்கும் மேற்பட்ட போலீசருக்கு இருந்த போதும் இரவு நேரத்தில் ஒரு மணி அளவில் சரளைகாடு பகுதியில் உள்ள முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெள்ள ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள கூடாரத்தில் அட்டையை உடைத்து துணியில் மண்ணெண்னையை நனைத்து வட மாநில தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வீசி உள்ளனர்.

அதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராக்கி, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுகிராம், எஸ்வந்த், கோகுல் ஆகியோர் மீது தீ பற்றியதில் ராக்கி மற்றும் சுகிராம் உயிருக்கு ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஸ்வந்த் மற்றும் கோகுல் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது தொடர்பாக கோவை மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சேலம் ஈரோடு நாமக்கல் எஸ்பி தலைமையில் ஜேடர்பாளையம் பகுதியில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று நித்யாவின் உறவினர்கள் கோரிக்கை படி நித்யாவின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் தலைமையில் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினர்.

நித்யாவின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் உயர் அதிகாரிகள் வட மாநில இளைஞர்கள் மீது தீ வைத்த சம்பவம் தொடர்பாக நித்யா தரப்பினரை மிரட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல் அப்பாவி விவசாயிகள், பொதுமக்களை மிரட்டுவது, நெருக்கடி கொடுப்பது, பொய் வழக்கு போடுவது, தாக்குதல் நடத்துவது, போன்றவற்றில் காவல்துறை ஈடுபடுவதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பார்த்துக் கொண்டிருக்காது என திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் பி.பெருமாள் தெரிவித்தார்.

Views: - 371

0

0