தேசியக் கொடி MADE IN CHINA விவகாரம்… ரொம்ப வேதனையா இருக்கு ; சபாநாயகர் அப்பாவு!!

Author: Babu Lakshmanan
1 September 2022, 6:07 pm
Quick Share

சென்னை : சீன ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்ட 20 இந்திய வீரர்களின் கல்லறைகள் காய்வதற்கு முன்னரே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்தி இருப்பது வேதனை அளிப்பதாக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் நடைபெற்ற 65வது காமன்வெல்த் பாராளுமன்ற சபநாயகர்கள் மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாநாட்டினை கலந்து கொண்டு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;- கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் நடைபெற்ற 65 வது காமன்வெல்த் பாராளுமன்ற சபநாயகர்கள் மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது.

பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் பற்றியும் நடவடிக்கைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் சபாநாயகர் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. தமிழக முதல்வர் பதவியேற்ற பின் முதல் வரவு செலவு திட்டத்தை காகிதம் இல்லாத சட்டப்பேரவை நிகழ்வாக நடத்தப்பட்டது.

சட்டமன்றம் ஆரம்பித்த 1921 முதல் நூறாண்டு சட்டமன்ற நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்றுவருகிறது.இந்நிலையில், நூறாண்டு கால சட்டப்பேரவை நிகழ்வுகளை விரைவில் இணையதளத்தில் பார்க்க முடியும் என தெரிவித்தார்.

தற்போது சட்டப்பேரவை நிகழ்வின்போது வினா விடை நேரம் மட்டுமே நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

சபாநாயகர் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடி, மத்திய அரசு அனுமதியோடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 1962 இந்திய சீனா போரின் போது இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மகாபலிபுரத்தில் சீனா அதிபர் மற்றும் இந்திய பிரதமர் சந்திக்கும் வரை 57 ஆண்டுகள் சீன எல்லையில் பதட்டம் நிலவி வந்தது. சந்திப்பிற்கு பிறகு எல்லையில் எந்த பதட்டமும் இல்லை. ஆனால், அதற்கு பிறகு தற்போது இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட பதட்டத்தில் 20 இந்திய வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

அந்த கல்லறையில் ஈரம் காய்வதற்குள் சீனாவில் இருந்து தேசிய கொடிகளை இறக்குமதி செய்வது வேதனை அளிக்கிறது, எனவும் கூறினார். மேலும், இந்திய பெருங்கடல் அமைதியாக தான் இருந்தது. ஆனால், சீன உளவு கப்பல் வந்தது. பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, என தெரிவித்தார்.

Views: - 461

0

0