கோவையில் காவு வாங்கும் புதிய மேம்பாலம் : திருச்சி சாலை மேம்பாலத் தடுப்பில் மோதி சுயநினைவு இழந்த இளைஞர்… போலீசார் ஆய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2022, 2:35 pm
Bridge Accident - Updatenews360
Quick Share

திருச்சி சாலை மேம்பாலத்தில் அடுத்தடுத்து விபத்து ஏற்படும் நிலையில் இன்று இளைஞர் ஒரு தவறி விழுந்த சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் ஆய்வு நடத்தி வருகின்றார்.

கோவை ராமநாதபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் சில தினங்களுக்கு முன் 2 மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் மேம்பாலத்தில் திறப்பட்ட முதல் நாளிலேயே இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர் தடுப்பில் மோதி உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஹரிகரன் (வயது 24) என்ற இளைஞர் இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரம் மேம்பாலத்தில் சுங்கம் செல்லும் பாதையில் அதிவேகமாக வந்ததாக தெரிகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவர் மேம்பால தடுப்பின் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டு, சுயநினைவு இழந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் தலைமையில் மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஒரு வழி சாலையாக உள்ள இந்த பாதையில் சிலர் எதிர் திசையில் வாகனங்களை இயக்குவதாகவும், இதனாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக துணை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் வேகத்தடைகள் அமைக்கவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இரவு வேகத்தடை ஒளிரும் விளக்குகளுடன் பொருத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Views: - 619

2

0