பொன்னேரி திமுகவுக்கு புதிய செயலாளர் நியமனம் : அஸ்தியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த மனைவி..!!
Author: Udayachandran RadhaKrishnan11 January 2022, 2:08 pm
திருவள்ளூர் : பொன்னேரி பேரூர் கழக திமுக செயலாளர் உயிரிழந்த 12 நாட்களில் புதிய பொருப்பாளர் நியமிக்கப்பட்டதால் அவரது அஸ்தியுடன் அவரது மனைவி மகட்சிஅலுவலகம் முன்பாக அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூர் கழக செயலாளர் விஸ்வநாதன் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென கடந்த 30 ஆம்தேதி உயிரிழந்தார் .
அவர் இறந்து 12 நாட்கள் ஆவதற்குள் புதிதாக தற்போது பேரூர் கழக பொறுப்பாளராக இளங்கோவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஸ்வநாதனின் மனைவி மருத்துவர் பரிமளம் விஸ்வநாதன் அவரது அஸ்தியை வைத்து கண்ணீர் மல்க பொன்னேரி திமுக பேரூர்கழக கட்சி அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவரை மாற்றி தனக்கோ அல்லது தனது மகனுக்கு பேரூர் கழக செயலாளர் பதவியை வழங்க வேண்டுமெனவும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்சிக்காக உழைத்து வருவதாக கண்ணீர் மல்க கூறினார்.
இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவருடன் பொன்னேரி நகர நிர்வாகிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
0
0