கோவை அரசு மருத்துவமனையில் ஜனவரி மாதத்தில் மகப்பேறு உயிரிழப்பு இல்லை : நன்றி கூறிய டீன் நிர்மலா!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2022, 8:57 pm
Cbe Gh - Updatenews360
Quick Share

கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து துறை மருத்துவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் ஜனவரி மாதத்தில் மகப்பேறு உயிரிழப்பு இல்லை என்ற சாதனையை படைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மகப்பேறு உயிரிழப்பை கட்டுப்படுத்துவதற்கு தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகினறன. ஆனால், பல்வேறு காரணங்களால் மகப்பேறு உயிரிழப்பு தவிர்க்க முடியாததாக ஆகிறது. பிரசவத்தின் போது ஏற்படும் தாய் சேய் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடிந்தவரை மருத்துவர்கள் போராடுகின்றனர்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி மாதத்தில் மகப்பேறு உயிரிழப்பை முழுவதும் கட்டுப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேற்கு மண்டலத்தின் மருத்துவ மையமாக இருந்து வருகிறது. அருகிலுள்ள மாவட்டவங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் இருந்து மகப்பேறு உள்பட அனைத்து தீவிர சிகிச்சைகளுக்கும் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சராசரியாக மாதத்திற்கு 700 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன. இவற்றில் 60 சதவீத பிரசவங்கள் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலையிலே காணப்படும்.

தவிர 1 முதல் 4 மகப்பேறு உயிரிழப்புகள் வரை ஏற்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களில் 60 சதவீதம் பேறுகால சிக்கல்களுடன் கூடியவர்கள் தான் வருகின்றனர்.

குறிப்பாக பேறுகால நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், அனீமியா, இருதய பாதிப்பு, நஞ்சுகொடி இடமாறுதல் போன்ற பல்வேறு சிக்கல்களுடன் உள்ள கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் பிரசவம் பார்க்கப்படுகிறது. நோய் பாதிப்பை தாமதாமாக கண்டறிதல், தாமத சிகிச்சை போன்ற காரணங்களால் தாய்-சேய் உயிரிழப்பு ஏற்படுகிறது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதத்தில் 1,293 பேருக்கு பிரசவம் மற்றும் பேறுகால கவனிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 650 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் கொரோனா நோய்த் தொற்றுடன் இருந்த 81 பேருக்கு பிரவசம் பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 18 பேர், தீவிர உயர் ரத்த அழுத்த பாதிப்புடன் 6 பேர், இருதய கோளாறுடன் 5 பேர், நஞ்சுக்கொடி இடமாறிய நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் வந்தவர்களும் உள்ளனர்.

மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, இருதயப் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மயக்கவியல் துறை, ரத்த வங்கி, அறுவை சிகிச்சைப் பிரிவு உள்பட பல்வேறு துறைகளின் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி மாதத்தில் உயிரிழப்பு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சிக்கலான பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிகளின் விவரங்கள் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் பெறப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. உரிய நேரத்தில் அவர்களுக்கு அறுவை சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ உபகரணம், , மருத்துவர்கள், மருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்படுகிறது. இதன் மூலம் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 974

0

0