கோவை அருகே வனப்பகுதியில் வடமாநில தொழிலாளி சடலம் மீட்பு : கொலையா? என போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2021, 3:16 pm
கோவை : மதுக்கரை அடுத்த காட்டுப்பகுதியில் வடமாநில தொழிலாளி சடலமாக மீட்டெடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை போடி பாளையத்திலிருந்து ஒத்தக்கால் மண்டபம் செல்லும் வழியில் இன்று காலை தனியார் கம்பெனி அருகே காட்டுக்குள் வடமாநில வாலிபர் பிணம் காயங்களுடன் கிடந்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்
பீகார் மாநிலம் சேர்ந்தவர் ஆஷீகுமார் (வயது 21). அவர் கோவை மதுக்கரை அடுத்த சீராபாளையம் பகுதியில் உள்ள தனியார் செருப்பு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக கம்பெனியில் வேலை செய்த வெளிமாநிலத்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அப்போது ஆஷீகுமார் அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
பின்னர் மீண்டும் கடந்த 19-ந் தேதி பீகாரில் இருந்து புறப்பட்டு கோவை திரும்பினார். வழக்கம் போல கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 3 நாட்களாக இவர் கம்பெனிக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை அங்குள்ள தனியார் கல்லூரி பின்புறம் உள்ள காட்டு பகுதியில் சென்றவர்கள் ஒருவர் இறந்து கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தது செருப்பு கம்பெனியில் வேலை செய்து வந்த ஆஷீகுமார் என்பது தெரியவந்தது .
மேலும் ஆஷீகுமார் இறந்து கிடந்த இடத்தில் இடுப்பு பெல்ட் ஒன்று கிடந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஷீகுமார் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0