தீவனம் அறுக்கச் சென்ற மூதாட்டி கொடூரக் கொலை… 4 சவரன் நகைக்காக கொள்ளையர்கள் வெறிச்செயல்…!!

Author: Babu Lakshmanan
7 June 2022, 6:14 pm
Quick Share

திருச்சி அருகே கால்நடைகளுக்கு பில் அறுக்க சென்ற மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் சுல்லாமணி கரையை சேர்ந்தவர் விவசாயி மலைகொழுந்தன் (72). இவரது மனைவி அக்கம்மாள் (65). இவர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி விட்டது. கணவன், மனைவி இருவரும் தனியாக ஆடு, மாடு வளர்த்து வருகிறார்கள்.

வளர்க்கும் கால்நடைகளுக்கு அக்கம்மாள் அருகில் உள்ள வயல்களுக்கு சென்று பில் அறுத்து வருவது வழக்கம். நேற்று மாலை வழக்கம்போல தன் வீட்டிற்கு அருகில் உள்ள சோளக்காட்டு பில் அறுக்க சென்றுள்ளார். பில் அறுக்கச் சென்ற அக்கம்மாள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால், அவருடைய கணவன் மற்றும் மகன் மகள்கள் அக்கம்பக்கத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை பேரன் தினேஷ்குமார் வீட்டிலிருந்து சுமார் ஒரு அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு சோலை காட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது, தன்னுடைய பாட்டி பிணமாகக் கிடப்பதை பார்த்து கூச்சலிட்டான். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் உதயகுமார் மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் அக்கம்மாள் அணிந்திருந்த 4 பவுன் செயின் மற்றும் தோடு, தாலி ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

மேலும், அவர் அணிந்திருந்த மூக்குத்தியை கழட்ட முடியாததால் மூக்கிலேயே குத்து விட்டு அதை கழற்ற முற்பட்டுள்ளனர். அப்படியும் கழற்ற முடியாததால் மூக்குத்தி மட்டும் விட்டு விட்டுச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், ஜீயபுரம் சரக துணை காவல் துறை கண்காணிப்பாளர் பரவாசுதேவன் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 738

0

0