மொட்டை அடிக்க காசா..? பழனி கோவிலில் பக்தரிடம் ரூ.200 வசூலிப்பு… வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
5 June 2023, 9:39 pm
Quick Share

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தரிடம் மொட்டை அடிக்க 200 ரூபாய் பெற்ற காட்சிகளால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில்/ பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துவதற்கு சண்முக நதி, சரவணப் பொய்கை, ஒருங்கிணைந்த முடி மண்டபம், மின் இழுவை ரயில் முடி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மொட்டை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணங்கள் செலுத்த தேவையில்லை என்றும், ஊழியர்களுக்கு மாதம் தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில், இன்று திருப்பூரை சேர்ந்த பழனி குமார் என்ற பக்தர் முடி காணிக்கை செலுத்துவதற்காக காலை சரவணப் பொய்கை மொட்டை அடிக்கும் இடத்தில் மொட்டை அடித்துள்ளார். அப்போது, மொட்டை அடிக்கும் ஊழியர்கள் பக்தர்களிடம் பணம் பெறக்கூடாது என்று அறிவிப்பு இருந்தும், ஊழியர் ஒருவர் மொட்டை அடிக்க வலுக்கட்டாயமாக இருநூறு ரூபாய் கையில் பெரும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், கூடுதல் பணம் வேண்டும் என்று கேட்கும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பக்தர் பழனி குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பழனி கோவிலுக்கு மொட்டை அடிக்க வந்ததாகவும், சரவணப் பொய்கை முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் மொட்டை அடித்ததற்கு ஊழியர்கள் 200 ரூபாய் வலுக்கட்டாயமாக கேட்டு பெற்றுக் கொண்டு விட்டு மேலும் கூடுதலாக கேட்டார் என்றும், மேலும் பக்தர் முடி காணிக்கை செலுத்திய அந்த முடியினை தூய்மை செய்யும் தூய்மை பணியாளர் 20 ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டதாகவும் கூறினார்.

இது குறித்து திருக்கோவில் அலுவலக புகார் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் சொன்னவுடன் அந்த ஊழியரிடம் அதிகாரிகள் பணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்ததாகவும், இதுபோன்று தமிழக அரசு மொட்டைக்கு இலவசம் என்று அறிவித்துவிட்டு ஊழியர்கள் பணம் பெறுவது தடுக்க வேண்டும் எனவும் அதில் கோரிக்கை விடுத்துள்ளார். மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் என்பது கிடையாது என்பது பங்குத்தொகை மட்டுமே அவர்களுக்கு கிடைக்க பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 484

0

0