‘அரோகரா’ முழக்கம்… பழனியில் களைகட்டிய பங்குனி தேரோட்டம்… திருத்தேரை வடம்பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!!

Author: Babu Lakshmanan
4 April 2023, 6:57 pm
Quick Share

திண்டுக்கல் : பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து முருகனை வழிபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த 29ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் முத்தரித்து பாதயாத்திரையாக வந்து பழனிமுருகனுக்கு அபிசேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் நேற்று நடைபெற்றது‌. புகழ்பெற்ற பங்குனித் தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது. பழனி அடிவாரம் கிரிவீதியில் நின்ற தேரில் அருள்மிகு முத்துக்குமாரசாமி – வள்ளி – தெய்வானை சமேதராக தேரேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருளி நான்குகிரி வீதிகளிலும் தேர்பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர். தேரோட்டத்தில் பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணைஆணையர் நடராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வருகிற 7ம்தேதி வெள்ளிக்கிழமை அன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவடைகிறது.

Views: - 245

0

0