12,239 வழக்குகளில் 1,194க்கு மட்டுமே தீர்வு: போக்சோ வழக்குகளில் மெத்தனம்..RTI தந்த அதிர்ச்சி ரிப்போர்ட்…!!
Author: Aarthi Sivakumar27 October 2021, 3:41 pm
சென்னை: தமிழகத்தில் இதுவரை பதியப்பட்டுள்ள 12,239 போக்சோ வழக்குகளில் 1,194 வழக்குகளுக்கு தண்டனை கிடைத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பாலியல் குற்றம் சுமத்தப்படும் குற்றவாளிகளும் சட்டத்தின் பிடியில் இருந்து நழுவும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.
பாலியல் அத்துமீறல், வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற உருவாக்கப்பட்ட ‘போக்சோ’ சட்ட வழக்குகளிலும் தண்டனை வழங்கப்படாமல் இருப்பதுதான் உச்சகட்ட வேதனை. கடந்த 6 ஆண்டுகளில் போக்சோ சட்டத்தில் பதியப்பட்ட மற்றும் தீர்வு காணப்பட்ட வழக்குகள் குறித்த அதிர்ச்சி தகவல், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கிடைக்கப்பட்டுள்ளது.
2015 ஜனவரி முதல் 2020 டிசம்பர் மாதம் வரையிலான ஆறு ஆண்டுக்காலத்தில் மட்டும் 12,239 போக்சோ வழக்குகள் பதியப்பட்டு, அதில் 1,194 போக்சோ வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
2015ம் ஆண்டு:
பதியப்பட்ட வழக்கு – 1,544
தண்டனை வழங்கப்பட்ட வழக்கு – 104
விடுதலை செய்யப்பட்ட வழக்குகள் – 155
முந்தைய ஆண்டுகளையும் சேர்த்து நிலுவையில் இருந்த வழக்குகள் – 1,516
2016ம் ஆண்டு:
பதியப்பட்ட வழக்கு – 1,583
தண்டனை வழங்கப்பட்ட வழக்கு – 199
விடுதலை செய்யப்பட்ட வழக்குகள் – 535
முந்தைய ஆண்டுகளையும் சேர்த்து நிலுவையில் இருந்த வழக்குகள் – 2,711
2017ம் ஆண்டு:
பதியப்பட்ட வழக்கு – 1,587
தண்டனை வழங்கப்பட்ட வழக்கு – 154
விடுதலை செய்யப்பட்ட வழக்குகள் – 630
முந்தைய ஆண்டுகளையும் சேர்த்து நிலுவையில் இருந்த வழக்குகள் – 3,547
2018ம் ஆண்டு:
பதியப்பட்ட வழக்கு – 2,039
தண்டனை வழங்கப்பட்ட வழக்கு – 275
விடுதலை செய்யப்பட்ட வழக்குகள் – 911
முந்தைய ஆண்டுகளையும் சேர்த்து நிலுவையில் இருந்த வழக்குகள் – 4,531
2019ம் ஆண்டு:
பதியப்பட்ட வழக்கு – 2,396
தண்டனை வழங்கப்பட்ட வழக்கு – 286
விடுதலை செய்யப்பட்ட வழக்குகள் – 838
முந்தைய ஆண்டுகளையும் சேர்த்து நிலுவையில் இருந்த வழக்குகள் – 5,599
2020ம் ஆண்டு:
பதியப்பட்ட வழக்கு – 3,090
தண்டனை வழங்கப்பட்ட வழக்கு – 176
விடுதலை செய்யப்பட்ட வழக்குகள் – 541
முந்தைய ஆண்டுகளையும் சேர்த்து நிலுவையில் இருந்த வழக்குகள் – 7,293
சென்னையில் அதிகபட்சமாக 1,117 போக்சோ வழக்குகளும், அதற்கு அடுத்தபடியாக மதுரையில் 788 வழக்குகளும், திருநெல்வேலியில் 771, சேலத்தில் 694 வழக்குகளும், விழுப்புரத்தில் 546 வழக்குகளும், வேலூரில் 530 வழக்குகளும், தூத்துக்குடியில் 512 வழக்குகளும், திண்டுக்கல்லில் 349 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.
எதிர்காலத்தின் நம்பிக்கையான குழந்தையை பாதுகாப்பது அனைவரின் தலையாய கடமையாகும். அதேபோல, அவர்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கான விசாரணையும், தண்டனையும் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.
0
0