தொடர் பாலியல் தொல்லை: பள்ளி தலைமை ஆசிரியர் மீது உடற்கல்வி ஆசிரியை எஸ்.பியிடம் புகார்…
Author: kavin kumar12 January 2022, 10:29 pm
கடலூர்: கடலூர் அருகே தொடர் பாலியல் தொல்லை அளித்து வரும் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடற்கல்வி ஆசிரியை எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் கோண்டூர் பகுதியை சேர்ந்த சோபியா ராஜகுமாரி என்பவர் நெல்லிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது அந்த பள்ளிக்கு புதியதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தலைமை ஆசிரியராக பதவி ஏற்ற ஆனந்த் பாஸ்கரன் என்பவர் கடந்த ஒரு வருட காலமாக தனக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்,
அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது;- தான் கடந்த பத்து ஆண்டுகளாக நெல்லிக்குப்பம் பகுதியில் அமைந்து உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறோன். தனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது பெங்களூருவில் வசித்து வருகின்றனர். எனது கணவர் இறந்ததால் தனியாக வசித்து வரும் என்னை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்த் பாஸ்கரன் கடந்த ஒரு வருட காலமாக தன்னிடம் வேண்டுமென்றே தகாத முறையில் பழக முயற்சி செய்து வருகிறார். மேலும் தொடர்ந்து தனக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்து வந்தார். ஒரு கட்டத்தில் இது குறித்து தன்னுடைய உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன்.
ஆனால் அதனை அறிந்து கொண்ட தலைமை ஆசிரியர் அதற்கு பின்னர் பள்ளியில் வேலை செய்யும் சக ஊழியர்கள் மத்தியில் தன்னை தரக்குறைவாக பேசுவது, தன் மீது வீண் பழி போட்டு அசிங்கப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி பின்னர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அங்கும் சாட்சியங்கள் போதவில்லை என கூறி வந்த நிலையில், திடீரென்று காவல் நிலையத்தில் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது பள்ளி நிர்வாகத்திடம் இருந்து தனக்கு பணியிடை மாற்றத்திற்கு ஆன ஆணை காவல் நிலைய வாசலிலேயே அளிக்கப்பட்டது.
பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் புகாரின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதற்கு மேல் இனியும் தனக்கு நீதி கிடைக்காவிடில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0
0