வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதிப்பு… தொடர் மழை பெய்து வருவதால் வனத்துறை அறிவிப்பு…!!

Author: Babu Lakshmanan
13 April 2022, 1:16 pm
Quick Share

கோவை : தொடர் மழையால் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து மலையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கோவிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் தினமும் மலையேறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தமிழக- கேரள எல்லையில் கடந்த சில நாள்களாக சூறாவளிக் காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெள்ளியங்கிரி 6வது மற்றும் 7வது மலையில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பக்தர்கள் மலை ஏறும் பாதை ஈரமாக இருப்பதுடன் மலை ஏறுவதற்கான சூழல் இல்லை.

இதற்கிடையே நாளை (வியாழக்கிழமை) தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளது.

வெள்ளிங்கிரி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை முடியும் வரை பக்தர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது :- வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள பாதைகள் பக்தர்கள் செல்வதற்கு இயலாத சூழல் உள்ளது. எனவே மழை முடியும் வரை வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றனர்.

Views: - 2001

2

1