கஸ்டமர் போல் வந்த களவாணிகள்…நகை கடையில் 2.5 சவரன் நகை அபேஸ் : 2 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

Author: Rajesh
19 March 2022, 11:30 am
Quick Share

சென்னை: நகை வாங்குவது போல நடித்து தங்க நகையை திருடி சென்ற பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் தங்க நகை கடை உள்ளது. இந்த நகைக் கடையில் பாஸ்கர் என்பவர் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். கடைக்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் கடையில் வேலை செய்யும் கௌசல்யா என்பவரிடம் தங்க காப்பு காண்பிக்க கூறியுள்ளனர்.

அப்போது அவர் ஒவ்வொரு மாடலாக எடுத்து காண்பித்துள்ளார். நிறைய மாடல்களை பார்த்த அப்பெண்கள் அதன் பின்பு எந்த மாடலும் பிடிக்கவில்லை என்று கிளம்பி சென்று விட்டனர். அதன் பிறகு இரவு நகைகளை சரிபார்த்த போது 20 கிராம் எடை கொண்ட தங்க காப்பு காணாமல் போயிருப்பதைக் கண்டு கௌசல்யா அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் தனது மேனேஜர் பாஸ்கரிடம் தெரிவித்தார். பாஸ்கர் கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல வந்து தங்க காப்பை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து பாஸ்கர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த திரு.வி.க நகர் போலீசார் சி.சி.டி.வி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து இரண்டு பெண்களையும் தேடி வருகின்றனர்.

Views: - 734

0

0