புதுச்சேரியில் இன்று ஒருநாள் முழுஅடைப்பு போராட்டம் : போலீஸ் பாதுகாப்புடன் வெளியூர் பேருந்துகள் மட்டும் இயக்கம்

Author: Babu Lakshmanan
29 March 2022, 11:15 am
Quick Share

புதுச்சேரி : பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றிற்கு காரணமான மத்திய அரசை கண்டித்து, புதுச்சேரி மாநிலத்தில் எதிர்கட்சிகள் சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், விலைவாசி உயர்வு, மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், ஊரக வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும், இன்றும் மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்து, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் இன்று பொது வேலை நிறுத்தத்துடன் சேர்த்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படாத நிலையில், வெளியூர்களுக்கு செல்லக்கூடிய ஒருசில அரசு பேருந்துகள் மட்டும் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முழு அடைப்பு போராட்டம் காரணமாக,புதுச்சேரியில் இன்று ஒருசில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 820

0

0