கொம்பும்… தெம்பும்… சீறிப்பாய ஆயத்தமாகும் காளைகள் ; ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்நோக்கியிருக்கும் காளையர்கள்!!

Author: Babu Lakshmanan
19 December 2022, 11:30 am
Quick Share

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்காக, காளைகள் மற்றும் காளையர்கள் தயாராகி வருகின்றனர்.

தை முதல் நாள் முதல் தமிழகமெங்கும் ஜாதி மதம் வேறுபாடு இன்றி நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிகட்டு போட்டிக்கு, இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் குறிப்பாக திண்டுக்கல் அருகே உள்ள உலகம்பட்டி, கொசவபட்டி, வெள்ளோடு, மறவபட்டி புகையிலைப்பட்டி, நத்தம் கோவில்பட்டி, ஆத்தூர், பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், வத்தலக்குண்டு அருகே உள்ள வாடிப்பட்டி, பில்லமநாயக்கன் பட்டி, நத்தம் வாடிப்பட்டி, நல்லவன் நாயக்கன் பட்டி, பழனி நெய்க்காரப்பட்டி மாவட்டத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு அன்பளிப்புகள் மிகப்பெரிய அளவில் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 60ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயபக்தியுடன் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நாட்டு மாடுகளை தங்கள் குழந்தைகளைப்போல், வருட முழுவதும் தினமும் பராமரித்து வளர்த்து, நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, மண் குத்தும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகளையளித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வளர்க்கப்படும் காளைகள் மற்றும் காளையர்கள் சென்று தமிழர்களின் வீரவிளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது வழக்கம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பாக கரிமாடு, நெத்திமரை, கரைசல், வலைகாளை, செவலைமரை, மன்னப்போர், மரமாடு காம்பைமாடு உட்பட 15க்கும் மேற்பட்ட
நாட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. முல்லிக்கட்டு மாடுகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று போட்டிகளில் வழங்கப்படும் தங்கம் வெள்ளி காசுகள், கட்டில், பித்தளை மற்றும் சில்வர், வெண்கல பாத்திரங்கள் சைக்கிள் உள்ளிட்ட பல பொருட்களை பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கள் பண்டிகை முதல் தமிழகமெங்கும் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வதற்காகவும், காளையர்கள் தங்களையும், காளைகளையும் தயார்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காளைகளுக்கு சத்தான உணவான கொள்ளு, புண்ணாக்கு, பருத்திவிதை, தவிடு, அரிசி, சோளம், சோயா கலந்த சத்துமாவு மற்றும் பேரீச்சம்பழம் உள்ளிட்டவைகளை உணவாக வழங்கி வருகின்றனர். மேலும், காளைகளோடு விளையாடும் காளையர்களுக்கும் தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

காளை வளர்ப்பவர்கள் செய்தியாளரிடம் கூறும் பொழுது :- ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளை வளர்த்து வருகிறோம். தினமும் பருத்தி, புண்ணாக்கு உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கி வருகின்றோம். மேலும், காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகின்றோம். அதில் குறிப்பாக, மண் குத்துதல், நடைபயிற்சி, தற்காலிமாக வாடிவாசல் அமைத்து இளைஞர்களைக் கொண்டு பழக்கப்படுத்தினால் போட்டி நேரத்தில் வாடிவாசலை பயமின்றி தாண்டும், பாதுகாப்புடன் கயிற்றால் கட்டியே வீரர்கள் பயிற்சியளிக்கின்றனர்.

இந்தவகையில் இந்தாண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தற்போது தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறோம். தமிழர்கள் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு அதிக மாடுகளை பிடிக்கும் வீரருக்கும், யாரும் நெருங்க முடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடும் காளை வளர்ப்பவர்களுக்கும், அரசு வேலையை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழக முழுவதும் தடை இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற அனுமதி அளிக்க வேண்டும்.

மேலும், காளைகளை பல்வேறு வகையில் துன்புறுத்துவதாக பொய்யான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு முன்வைத்து வருகிறது. அதில் உண்மையில்லை. நாங்கள் எங்களது குழந்தைகளைப் போல் காளைகளை வளர்த்து வருகிறோம். எங்களது உழைப்பில் குறிப்பிட்ட தொகையை காளைகளுக்கு செலவு செய்து வருகிறோம். அப்படி இருக்கும் பொழுது நாங்கள் எதற்காக காளைகளை துன்புறுத்த போகிறோம். தமிழர்களின் வீர விளையாட்டு எப்பொழுதும் தங்கு தடை இல்லாமல் நடக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.

Views: - 604

0

0