முழு கொள்ளளவை நெருங்கும் பூண்டி ஏரி: பிற்பகல் 2 மணிக்கு உபரிநீர் திறப்பு…கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!
Author: Aarthi Sivakumar10 October 2021, 12:30 pm
சென்னை: 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் 33.95 அடியாக உயர்ந்ததால் உபரி நீர் திறக்கப்படுகிறது. மேலும், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையால் 4 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய 5 ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, பூண்டி ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் 33.95 அடியாக உயர்ந்துள்ளது.
நீர்மட்டம் உயர்ந்து வருவதால், உபரி நீர் படிப்படியாக திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பூண்டி ஏரியில் இருந்து மதியம் 2 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ஏரி நீர் செல்லும் கொசஸ்தலை பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0