கொசஸ்த்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை.. பூண்டி நீர்த்தேக்கத்தில் விரைவில் படகுசவாரி… நீர்வளத்துறை தகவல்

Author: Babu Lakshmanan
21 July 2022, 6:31 pm
Quick Share

சென்னை : கொசஸ்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட உலக வங்கி நிதி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமானது மொத்த உயரம் 35 அடியில் 3231 மில்லியன் கன அடி கொள்ளளவினை கொண்டதாகும். இந்த நீர்த்தேக்கத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கூடுதலாக 1.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையில், அதன் உயரத்தை அதிகரிக்க உலக வங்கியின் ஆலோசகர் சூப்பே குழுவினருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நீர்வரத்து, அணையின் பாதுகாப்பு, அணையில் இருந்து தண்ணீரை புழல், செம்பரம்பாக்கம் சோழவரம் ஏரிகளுக்கு அனுப்பும் முறைகள், கொசஸ்த்தலை ஆற்றின் நீர்வரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, திருவள்ளூர் உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணா, கொசஸ்த்தலை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் பொதுப்பணி திலகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், கொசஸ்த்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதற்கும், பூண்டி நீர் தேக்கத்தின் உயரத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு இன்றி அதிகரிக்கவும், உலக வங்கி நிதி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறினார்.

மேலும், சுற்றுலாத்துறை சார்பில் படகு போக்குவரத்து துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், புதுச்சத்திரம் பகுதியில் 2015 கனமழையில் உடைந்த தடுப்பணை புதிதாக கட்டப்பட்ட பின், தற்போது அதன் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்ததாகவும், அவர் தெரிவித்தார்.

Views: - 465

0

0