பாலியல் புகாரில் சிக்கிய பிரபல ஜவுளிக் கடை உரிமையாளருக்கு சிறை : உள்ளூர் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி USக்கு எஸ்கேப்..!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2022, 6:16 pm
Ganapathy Silks Owner Arrest -Updatenews360
Quick Share

தேனி : திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி – மதுரை சாலையில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடை நிறுவனத்திற்கு (ஸ்ரீகனபதி சில்க்ஸ்) தமிழகத்தில் கோயமுத்தூர், சங்கரன்கோவில் மற்றும் வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளிலும் கிளைகள் உள்ளன.

இவற்றில் நூற்றுக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அதன் உரிமையாளராக தற்போது முருகன் (வயது 32) என்பவர் உள்ளார். ‌

இந்நிலையில் தேனியில் உள்ள ஜவுளிக்கடை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் டிசைனர் ஸ்டூடியோ மற்றும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகத்தின் 29 வயது பெண் உரிமையாளர் ஒருவர், முருகன் மீது தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூதல் ஜவுளிக்கடையின் உரிமையாளர் முருகன் தன்னிடம் நட்பு ரீதியாக பழகி வந்தார். அதன் பின், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.

இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் நான் மறுத்த மறுத்த போதிலும் என்னை நம்ப வைத்து ஏமாற்றி வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்தார்.

இதையடுத்து சின்னமனூரைச் சேர்ந்த வேறோரு பெண்ணை தன்னுடைய பெற்றோர் திருமணம் செய்து கொள்ளச் சொல்வதாக கூறிய முருகன், கடந்த மாதம் மார்ச் 8ஆம் தேதி தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள அவரது மேலாளர் வினோத் வீட்டில் வைத்து சத்யா என்பவர் முன்னிலையில் தாலியை கட்டி தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் முருகன், சின்னமனூரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் ஜவுளிகடை உரிமையாளர் முருகன் 40 நாட்களுக்கு பிறகு வியாழக்கிழமையான இன்று தேனி காவல்துறையினரிடம் சரணடைந்தார் அதனைத்தொடர்ந்து தேனி மகிளா நீதிமன்றத்தில் முருகனை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட சிறையில் முருகனை அடைத்தனர். பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் பாலியல் புகாரி சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1366

0

0