ஆட்டோவில் எஸ்கேப்பான குடும்பம்… சினிமா பட பாணியில் பைக்கில் துரத்திச் சென்ற இளைஞர்கள்.. ; கல்லால் அடித்ததில் 10 வயது சிறுமி பலி…!

Author: Babu Lakshmanan
17 November 2022, 8:50 am
Quick Share

புதுக்கோட்டை ; கோயில் பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டோவில் தற்போது முயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயம் அடைந்த 10 வயது சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்த வெண்கல பொருட்களை திருடிக் கொண்டு ஆட்டோவில் தப்ப முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு நபர்களை, அந்த பகுதி இளைஞர்கள் திரைப்பட பாணியில் சேசிங் செய்து விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவத்தின் போது அந்த கும்பலை சேர்ந்த ஒரு பத்து வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளான ஆழ்வாபட்டி, கீழையூர்,அரையான்பட்டி, வாரியப்பட்டி உள்ளிட்ட பகுதி கிராமங்களில் இருந்த கோயில்களின் வெளியே மாட்டப்பட்டிருந்த வெண்கல குத்துவிளக்கு மணி உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டு ஒரு கும்பல் 14 ஆம் தேதி மாலை ஆட்டோவில் தப்பியதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆட்டோவில் தப்பிச்செல்லும் கும்பலை இருசக்கர வாகனங்களில் சென்று விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் ஆட்டோவை வேகமாக ஓட்டிச் சென்றதோடு, ஆட்டோவில் இருந்த கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட வெண்கல பொருட்களையும் துரத்தி வந்த நபர்கள் மீது வீசி எறிந்தனர்.

எனினும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்த ஊர் மக்களும், இளைஞர்களும் திரைப்பட பாணியில் சேசிங் செய்து புதுக்கோட்டை நகர் பகுதிக்குள் இருக்கும் மச்சுவாடி எனும் இடத்தில் அந்த ஆட்டோவை வழிமறித்து பிடித்தனர்.

இதில் பொதுமக்கள் சிலர் அந்தக் கொள்ளை கும்பலை சேர்ந்த சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அந்த ஆட்டோவில் இருந்த 10 வயது சிறுமியான கற்பகாம்பிகாள் படுகாயம் அடைந்தார்.

ஆனால் இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், அந்த சிறுமியின் தந்தை தாக்கியதில் தான் அந்த குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தனர். இதேபோல் அதிலிருந்து கணவன், மனைவி உள்ளிட்ட மற்ற ஐந்து பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் காயம் அடைந்த ஆறு பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதன் பின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோயில்களில் திருடிக் கொண்டு ஆட்டோவில் தப்பி வந்த கும்பல் கடலூர் மாவட்ட விருத்தாசலத்தை சேர்ந்த சத்தியநாராயணசாமி, அவரது மனைவி லில்லி புஷ்பா, மகன்கள் விக்னேஸ்வரசாமி, சுபமெய்யசாமி மற்றும் மகள்கள் கற்பகாம்பிகாள், ஆதிலட்சுமி என்ற ஆறு பேர் என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து கற்பகாம்பிகளுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு கற்பிகாம்பாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனது மகள் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது பெற்றோர்களான கொள்ளை கும்பலை சேர்ந்த சத்திய நாராயணசாமி, லில்லி புஷ்பா தம்பதியினர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் போலீசார் அவர்களையும், அவரது மகன்களையும் தொடர்ந்து பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

ஏற்கனவே, கோயில்களில் திருடிய சுமார் 200 கிலோ மதிப்பிலான வெண்கல பொருட்களை உடையாளிபட்டி போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இதே போல் கீரனூர் பகுதியில் உள்ள கோயில்களிலும் வெண்கல பொருட்கள் திருடுபோய் உள்ளதாக அந்த காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 433

0

0