பொய்யும், புரட்டும் ஒருநாள் முடிவுக்கு வரும்… ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..!!

Author: Babu Lakshmanan
23 March 2023, 2:21 pm
Quick Share

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு எதிரே உள்ள சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் செல்வபெருந்தகை தலைமையில் வெளிநடப்பு செய்து சட்டமன்றம் எதிரே உள்ள பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து செல்வபெருந்தகை கூறியதாவது :- ஆர்எஸ்எஸ் கூட்டத்தைச் சார்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மக்களின் குரலாக பிரதிபலித்து பேசிய தலைவர் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. போராட்டத்திற்காக சிறை சென்ற குடும்பம். இரண்டு ஆண்டுகள் இல்லை, 20 ஆண்டுகள் சிறை விதித்தாலும், இந்த நாட்டு மக்களுக்காக, எங்கள் தலைவரின் குரல் ஒலிக்கும்.

பொய்யும் புரட்டும் ஒரு நாள் முடிவுக்கு வரும். நாடாளுமன்றத்தில் ஏற்படும் பிரச்சனைகளை திசை திருப்ப ஆர்எஸ்எஸ்ம், பிஜேபியும் இணைந்து செயல்படுகிறது.

இந்த தேசத்தை ஒற்றுமை படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டவர் ராகுல் காந்தி , மோடி அவர்களே 2024 ஆம் ஆண்டு மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள், என தெரிவித்துள்ளார்.

Views: - 246

0

0