ராமஜெயம் கொலை வழக்கு… விசாரணை வளையத்தில் அமைச்சர் கேஎன் நேருவின் குடும்பம்….? ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்!

Author: Babu Lakshmanan
16 January 2023, 4:31 pm
Quick Share

ராமஜெயம் கொலை வழக்கு ரவுடிகளிடம் நாளை உண்மை கண்டறியும் சோதனை முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தாரையும் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கல்லணை காவிரிக் கரையோரம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கை, கால்கள் இரும்புக் கம்பி மற்றும் பிளாஸ்டிக் டேப்புகளால் கட்டப்பட்ட நிலையில் உடலை காவல்துறையினர் கண்டெடுத்தனர். இக்கொலை நடைபெற்று சுமார் 11 ஆண்டுகள் கடந்து விட்டது.

இந்நிலையில் சிபிசிஐடி காவல்துறை எஸ்பி.ஜெயக்குமார் தலைமையில் டிஎஸ்பி மதன் கண்காணிப்பில் 40 பேர் கொண்ட காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் ராமஜெயம் கொலை சம்பவம் நடந்தபோது திருச்சியிலிருந்த ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியலில் தமிழகத்தின் பிரபல ரவுடிகளான சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்தியராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், மயிலாடுதுறை கலைவாணன் உள்ளிட்ட 13பேர் மீது உறுதிபடுத்தப்படாதா சந்தேகம் எழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்த நிலையில், அந்த பட்டியலில் உள்ளவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி நீதிமன்றத்தில் கடந்த சில மாதத்திற்கு முன்பு சிபிசிஐடி காவல்துறையினர் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றனர்.

இந்நிலையில் உண்மை கண்டறியும் சோதனையை 13 பேரிடமும் நாளை 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தடவியல் துறை அலுவலகத்தில் அரசு நிபுணர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளதாகவும் எனவே சம்பந்தப்பட்ட அனைவரும் உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள தனிப்பட்ட முறையில் சிறப்பு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உண்மை அறியும் சோதனை முடிவில் குற்றவாளிகள் யார் என்பது அறிவியில் ரீதியாக தெரியவரும் எனக் கூறப்படுகிறது. மேலும், இதன் முடிவுகளை இம்மாத இறுதிக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணைக்கு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கிறது.

ரவுடிகளின் வழக்கறிஞர்கள் தொடர்ந்து நேருவின் குடும்பத்தினரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்து வருகிற நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் குடும்பத்தினர் சிலரிடமும் இந்த சோதனை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Views: - 338

0

0