16 வயது சிறுமி பேச மறுத்ததால் ஆத்திரம் : கழுத்தை அறுத்து கொலை முயற்சி.. ஒருதலை காதலன் வெறிச்செயல்…!!

Author: Babu Lakshmanan
26 August 2022, 3:34 pm
Quick Share

ராணிப்பேட்டை அருகே 16 வயது சிறுமி பேச மறுத்ததால் கழுத்தை அறுத்த ஒருதலை காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள சென்னசமுத்திரம் மோட்டூர் டேங்க் தெருவை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். அதே தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் விஜயகுமார் (25), சுந்தர பாண்டியனின் மகளை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த சிறுமியின் வீட்டில் இந்த விவகாரம் தெரிய வரவே, தனது மகளை அவரது பெற்றோர்கள் பனப்பாக்கத்தில் உள்ள சித்தி வீட்டில் கடந்த 6 மாத காலமாக இருக்க வைத்தள்ளனர். பின்னர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் தனது சொந்த ஊரான சென்னசமுத்திரம் மோட்டூர் பகுதிக்கு வந்த அந்த சிறுமியிடம், விஜயகுமார் பலமுறை அந்தப் பெண்ணிடம் பேச முயன்றுள்ளார்.

ஆனால், அந்த சிறுமி ஒருதலை காதலனுடன் பேச மறுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், அந்த சிறுமி தனியாக வருவதை கவனித்து, தான் மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய கத்தியை கொண்டு அந்த சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

பிறகு ரத்த வெள்ளத்தில் சரிந்த 16 வயது சிறுமியை அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். தற்போது ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இச்சம்பவம் குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கத்தியால் அறுத்து தப்பி ஓடி தலைமறைவாக உள்ள ஒரு தலை காதலன் விஜயகுமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கலவை அருகே இளைஞர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்த சிறுமி, தன்னிடம் பேச மறுத்ததால் கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் கலவை கிராமத்தில் பெரும் சோகம் மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 646

0

0