ஆ.ராசாவின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி ரொக்கம்… ஒரு ஏக்கர் நிலம் சன்மானம் : சர்ச்சை அறிவிப்பை வெளியிட்ட இந்து அமைப்பு நிர்வாகி கைது..!!

Author: Babu Lakshmanan
22 September 2022, 11:21 am
Quick Share

திமுக எம்பி ஆ.ராசாவின் நாக்கை அறிவிப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்த இந்து அமைப்பு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

திமுக எம்பி ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என பேசியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, இந்து முன்னணியினர் திமுக எம்.பி. ஆ.ராசாவை மீது காவல்நிலையங்களில் புகார் அளித்ததுடன், அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, பாஜக சார்பில் 26ம் தேதி சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ.ராசாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்து மதுரையைச் சேர்ந்த இந்துமக்கள் புரட்சி படையின் நிர்வாகி கண்ணன் என்பவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக முகநூலில் அவர் விடுத்த பதிவில், இந்திய திருநாட்டில் செய்த சத்திய பிரமாணத்தை மறந்து அந்நிய நாட்டின் கைக்கூலி போல் செயல்படும் திமுக எம்பி ஆ.ராசாவை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்துக்களை விபச்சாரிகள் எனக் கூறி வரும் அரசியல் விபச்சாரியே…. இந்த அரசியல் விபச்சாரியின் நாக்கை அறுத்து கொண்டு வரும் காவி ஆண் மகனுக்கு ஒரு கோடி ரொக்கமும், ஒரு ஏக்கர் நிலமும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, முகநூலில் சர்ச்சை கருத்து பதிவிட்டதாக உத்தப்பநாயக்கனூர் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 393

0

0