ஆண் குழந்தை ரூ.10 லட்சம், பெண் குழந்தை ரூ.5 லட்சம் : அரசு மருத்துவமனை ஊழியர்களே விற்பனை செய்யும் அதிர்ச்சி.. பரபரப்பு ஆடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2022, 1:46 pm
Infant Kidnap and Sale - Updatenews360
Quick Share

ராணிப்பேட்டை : மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளை மருத்துவமனை ஊழியர்களே விற்பனை செய்வது அம்பலமாகியுள்ளது. இது குறித்து மருத்துவமனை ஊழியர் வெளியிட்ட ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளை மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியர்கள் விற்பனை செய்துவிட்டதாகவும், தற்போது உண்மை வெளியே வந்ததால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சக ஊழியர் பதிவு செய்து வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேல்விஷாரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

கணிசமான அளவிற்கு பிரசவம் நடைபெறுகிறது. இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியரான ரகு, அங்கு பிறந்த சில குழந்தைகளை மருத்துவ ஊழியர்களான தனலட்சுமி, பரிமளா, சுப்ரமணி ஆகியோர் ஆண்குழந்தைகள் எனில் 10 லட்சத்திற்கும், பெண் குழந்தை எனில் 5 லட்சத்திற்கும் விற்பனை செய்வதாக கூறி வெளியிட்டுள்ள ஆடியோ வைரலாகி வருகிறது.

குறிப்பாக கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கின் போது பிறந்த இசுலாமிய ஜோடிக்கு பிறந்த பெண் குழந்தையை 5 லட்சத்திற்கு விற்பனை செய்ததாகவும், அதற்கான ஆதாரங்களை மாற்றி ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த உண்மை தற்போது வெளிவந்துள்ள நிலையில் இதற்கு காரணம் தான் தான் என நினைத்து தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறும் அவர், இதனால் கடந்த இரண்டு மாதங்களாக பணிக்கு செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் மணிமாறன் கூறுகையில், 4 குழுக்கள் அமைத்து தற்போது விசாரணை மேற்கொண்ட நிலையில் புகாருக்கான முகாந்திரம் இருப்பதாகவும், கூடிய விரைவில் விசாரணை முடிவுக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Views: - 1086

0

0