குறுகிய காலத்தில் ரூ.400 கோடி வருமானம்.. சிக்கலில் பிரபல நிறுவனங்கள் : செக் வைத்த வருமான வரித்துறை!!
Author: Udayachandran RadhaKrishnan10 October 2021, 12:17 pm
காஞ்சிபுரத்தை சேர்ந்த பட்டு சேலை நிறுவனத்திடம் ரூ.100 கோடியும், நிதி நிறுவனத்திடம் ரூ.150 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 5-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 34 இடங்களில் 3 நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதில் குறிப்பாக, பச்சையப்பாஸ் சில்க், எஸ்கேபி நிதி நிறுவனம், செங்கல்வராயன் சில்க் ஆகிய 3 நிறுவனங்கள் தொடர்பான 34 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், 3 நிறுவனங்களில் தனித்தனியாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், எஸ்கேபி சிட்பண்ட் நிறுவனத்தில் குறுகிய காலத்தில் ரூ.400 கோடி சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான கணக்கையும் அவர்கள் மறைத்திருப்பதாகவும், அவர்களிடம் இருந்து கடனாக பெற்றவர்களுடைய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேபோல் கணக்கில் வராத ரூ.1.35 கோடி பணமும், 7.5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல் 2 துணி கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.44 லட்சம் பணமும், 9.5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த பட்டு சேலை நிறுவனத்திடம் ரூ.100 கோடியும், நிதி நிறுவனத்திடம் ரூ.150 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த 3 நிறுவனங்களிடம் பறிமுதல் செய்யபட்ட ஆவணங்கள் தொடர்பாக வரும் நாட்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
0
0