சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் : மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
22 January 2021, 8:17 pmபெங்களூரூ : உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 27ம் தேதி அவர் விடுதலையாக உள்ள நிலையில், திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பெங்களூரூ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் 20ம் தேதி சேர்க்கப்பட்டார்
அங்கு, அவருக்குள்ள தைராய்டு, ரத்தக் கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நுரையீரல் தொற்று அறிகுறி தென்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில், அவருக்கு பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிடி ஸ்கேனுக்காக அவர் மீண்டும் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் மற்றும் அதிதீவிர நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
0
0