கடத்தப்பட காதல் ஜோடி: காரில் இருந்து சத்தம்போட்டு தப்பிய திக் திக் சம்பவம்..!!

Author: Rajesh
2 March 2022, 10:27 pm
Quick Share

கோவை: கோவையில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை அவர்களது பெற்றோர் கடத்தி கொலை செய்ய முயல்வதாகக் கூறி காரில் இருந்து சத்தம்போட்டபடி இறங்கியவர்களை போலீசார் மீட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வர் (22). இவரும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்நேகா (19) என்பவரும் காதலித்து வந்த நிலையில், நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து இருதரப்பையும் சமாதானப்படுத்திய போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விக்னேஷ்வர் மற்றும் அவரது மனைவி ஸ்நேகா இருவரும் இன்று, ஸ்நேகாவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்வதாகக் கூறிய ஸ்நேகாவின் பெற்றோர் அவர்களை காரில் அழைத்துக் கொண்டு அவினாசி சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த போது, ஸ்நேகா தரப்பு விக்னேஷ்வர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால் பயந்து போன காதல் ஜோடிகள் அலறி அடித்துக் கொண்டு காரில் இருந்து வெளியே வந்தனர். தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவர்களை மீட்டு பந்தயசாலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

காதல் ஜோடிகள் கடத்தப்பட்ட விவகாரம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 792

1

0