பள்ளியில் மாணவிகளுடன் நடனமாடிய ஆசிரியை : வைரலாகும் வீடியோ.. குவியும் பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
3 February 2023, 9:25 pm
Quick Share

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர் ஒருவர் தமது பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்துவதற்காக மலையாள பாடல் ஒன்றிற்கு மாணவிகளோடு இணைந்து நடனமாடிய காட்சி வைரலாகி வருகிறது.

துக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றுபவர் ரேவதி. இந்த நிலையில், நடந்து முடிந்த பள்ளிகளுக்கு இடையேயான கலைத் திருவிழாவின் போது, அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளும், கலைத் திருவிழாவில் பங்கேற்க நடன பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

அப்போது, அப்பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்தும் நோக்குடன் மலையாள பாடல் ஒன்றுக்கு அப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் ரேவதி நடனமாடிய காட்சிகளும், அவருடன் சேர்ந்து அப்பள்ளி மாணவிகளும் நடனமாடிய காட்சிகளும் காண்போரின் கவனத்தை ஈர்த்தது.

கலைத் திருவிழாவில் பங்கேற்க சென்ற அரசு பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்துவதற்காக ஆசிரியர் ரேவதி நடனமாடிய வீடியோவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எங்கள் அரசு பள்ளி ஆசிரியை ரேவதியின் ஒரு அழகான நிகழ்ச்சி என்றும், அவர் தன் குழந்தைகளுடன் நடனமாடும் ஆசையை அண்மையில் நடந்து முடிந்த கலை திருவிழா ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்றும், நடனம் வாழ்வை அழகாக்கும் என்றும் ஆட்சியர் பதிவிட்டுள்ளார்.

Views: - 727

2

1