மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனை? கோவையில் சல்லடை போட்டு சோதனை நடத்தும் போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2022, 12:25 pm
Raid in Medical Shop - Updatenews360
Quick Share

கோவை கே.ஜி.சாவடியில் உள்ள மருந்தகங்களில் மருந்தக ஆய்வாளர் மற்றும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

சமீபகாலமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை மாத்திரை பயன்பாடு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஈச்சனாரி அருகே போதை ஊசி எடுத்துக் கொண்ட காவல் உதவி ஆய்வாளரின் மகன் உயிரிழந்தார்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மருந்தகங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள மருந்தகங்களில் மதுக்கரை காவல் ஆய்வாளர் வைரம், மருத்தக ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் கே.ஜி.சாவடி உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குறிப்பாக போதைக்காக இளைஞர்கள் வாங்கக்கூடிய மாத்திரைகளின் மொத்த இருப்பு விற்பனைகளை ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் உள்ள மருத்தக உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது மருத்துவர் ஆலோசனை மற்றும் ரசீது இல்லாமல் மருந்துகள் வழங்க வேண்டாம், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் கொண்டு வரும் ரசீதையும் நன்கு பரீசிலனை செய்து சில வகை மருந்துகளை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் லாப நோக்கத்தில் போதைக்காக வாங்கும் மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Views: - 325

0

0