துவைக்கும்போது அழுக்கு நீர் பட்டதால் இளைஞர் கொடூர கொலை.. தேனியில் 7 பேர் சிக்கியது எப்படி?
Author: Hariharasudhan6 December 2024, 5:11 pm
தேனியில் துணி துவைக்கும்போது அழுக்கு நீர் பட்டதால் 42 வயது நபரை சரமாரியாக தாக்கி கொலை செய்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி: தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் போஜராஜ் (80). இவரது மகன் தாமோதரன் (42), மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் இவர் சாலை ஓரங்களில் கிடக்கும் மதுபாட்டில்கள், அட்டைப் பெட்டிகளைச் சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 6ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தாமோதரன், பழனிசெட்டிபட்டி காவல் நிலையம் பின்புறம் உள்ள அணை கருப்பணச்சாமி கோயில் அருகே செல்லும் முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதியில் உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்த அறிந்த தாமோதரனின் தந்தை போஜராஜ், மகனை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால், வீட்டிற்கு அழைத்து வந்த மறுநாளே தாமோதரன் உயிரிழந்தார். இதனையடுத்து, தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பழனிச்செட்டிபட்டி காவல் நிலையத்தில் போஜராஜ் புகார் அளித்தார்.
அதேநேரம், பிரேதப் பரிசோதனை முடிவில், தாமோதரன் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே, கொலை வழக்காக மாற்றிய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தத் தொடங்கினர். அப்போது, கோயில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: கணவனைக் கொல்ல 20 சவரன் நகையை அடகு வைத்த மனைவி.. திருப்பூரில் அரங்கேறிய சம்பவம்!
இதில், இளைஞர்கள் சிலர் அப்பகுதியில் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த கும்பலில் இருந்தவர்கள், அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (23), ஹரீஸ்பிரவீன் (19), விஜயபாரதி (19), அன்புச்செல்வம் (22) மற்றும் புவனேஸ்வரன் (18) உள்ளிட்ட 7 பே என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
இதனையடுத்து 7 பேரையும் பிடித்து விசாரித்தபோது, சம்பவம் நடந்த நாளன்று, ஆற்றுப் பகுதியில் தாமோதரன் அவரது துணியை துவைத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அருகே இருந்த அந்த இளைஞர்கள் மீது அழுக்குத் தண்ணீர் தெறித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தாமோதரனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, அருகில் கிடந்த தென்னை மட்டை, கம்புகளைக் கொண்டு தாமோதரனைத் தாக்கியுள்ளனர். இதில் தாமோதரன் மயக்கம் அடைந்ததால், 7 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அருண்குமார் மற்றும் மாயக்கண்ணன் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.