தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்…கேட்ட பணத்தை தராததால் ஆத்திரம்: கோவையில் பரபரப்பு..!!

Author: Rajesh
23 April 2022, 10:50 am
Quick Share

கோவை: தந்தை பணம் தராத ஆத்திரத்தில் மகன் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை புலியகுளம் புதிய குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கருப்பசாமி (61). இவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு சுரேஷ்(39) என்ற மகனும், வனிதா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.ஐ.எச். எஸ். காலனியில் வசித்து வருகிறார்கள். சுரேஷ் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு புலியகுளம் பகுதியில் கணவரைப் பிரிந்து வசித்து வந்த விமலா (51) என்ற பெண்ணுடன் கருப்பசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது அவரது மனைவி வசந்தாவுக்கு தெரிய வரவே கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனையடுத்து அவர் தனது கணவரைப் பிரிந்து மகனுடன் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் வசித்து வந்தார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்ற கருப்பசாமி அப்போது கிடைத்த ஓய்வூதிய பணப் பலன்களை காதலி விமலாவிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அவரது மகன் சுரேஷ் தனது தந்தையை அடிக்கடி நேரில் சந்தித்து தான் கஷ்டப்படுவதால் பணம் கொடுத்து கேட்டார். ஆனால் கருப்பசாமி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இது சுரேசுக்கு தனது தந்தை மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை கொலை செய்யத் திட்டமிட்டார். நேற்று இரவு கருப்பசாமி அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது குடித்தார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றார். அவர் போதையில் வந்ததால் காதலி விமலா கதவை திறக்காமல் படுத்து தூங்கி விட்டார்.

இதனையடுத்து அவரது வீட்டு வாசலில் கருப்பசாமி படுத்து இருந்தார் நள்ளிரவு சுரேஷ் தனது தந்தையிடம் பணம் கேட்பதற்காக வந்தார். படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தவரை எழுப்பி அந்த பகுதியில் உள்ள கருப்பராயன் கோவில் அருகே அழைத்துச் சென்றார்.

அங்கு வைத்து பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தனது தந்தையின் கழுத்தை அறுத்தார். இதில் நிலைதடுமாறிய கருப்பசாமி தப்பிப்பிருப்பதற்காக 10 மீட்டர் தூரம் ஓடி கீழே விழுந்தார்.

பின்னர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தனது தந்தை இறந்ததும் சுரேஷ் அங்கு இருந்து தப்பிச் சென்றார். கருப்பசாமி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த சுரேஷை தேடி வருகிறார்கள்.

Views: - 792

0

0