வேலைக்காக குவைத்துக்கு சென்ற 4 நாட்களில் நடந்த துயரம் : சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்.. உடலை கொண்டு வரக்கோரி உறவினர்கள் மனு..!!

Author: Babu Lakshmanan
13 September 2022, 8:07 pm
Quick Share

குவைத் நாட்டிற்கு சென்று 4 நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டவரின்  உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மனைவி வித்யா. இந்த தம்பதியருக்கு முத்த மகன் நித்திஷ்  மற்றும் ரித்தீஷ் ஆகிய  இரண்டு மகன்கள் உள்ளனர். முத்துக்குமரன் தனது குடும்ப சூழல் கருதி வேலைக்கு செல்வதற்காக கடந்த 2ந் தேதி குவைத் நாட்டுக்கு சென்றார். அங்கு சென்று வேலைக்கு சேர்ந்ததும் வேலை கடினமாக உள்ளது குடும்பத்தினரிடம் கூறிவந்துள்ளார்.

இந்த நிலையில், குவைத் நாட்டிற்கு சென்று நான்கு நாட்களிலேயே, அதாவது 7ஆம் தேதி முத்துக்குமரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் கடந்த 9ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடி யில் இருக்கும் முத்துக்குமரனின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இது குறித்து விசாரித்ததில் முத்துக்குமரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.

முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ள முத்துக்குமரனுக்கு யாரிடமும் எந்தவித முன் விரோதம் இல்லாத நிலையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். எனவே முத்துக்குமரன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும், மேலும் அவரது மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும், முத்துக்குமரனை இழந்து வாடும் குடும்பத்திற்கு இழப்பீடுகளை பெற்றுத்தர வேண்டும் என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்டோர் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று கூத்தாநல்லூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து முத்துக்குமார் மனைவி கூறுகையில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து வெளிநாட்டில் உயிரிழந்துள்ள தனது கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும்,” என தெரிவித்தார். 

Views: - 583

0

0