தம்பியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அண்ணன் : புதிய பைக் வாங்கியதால் வெறிச்செயல்!!
Author: Udayachandran RadhaKrishnan2 November 2021, 3:48 pm
தூத்துக்குடி : தந்தையிடம் புதிய பைக்கினை காண்பிக்க வந்தவர் தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற புலிப்பாண்டி. இவருக்கு இரண்டு மகள்கள் மூன்று மகன்கள். மூத்த மகன் முனியசாமி (வயது 51). இவருக்கு சிறிது மனநிலை பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 2வது மகன் செல்லத்துரை (வயது 50) திருமணம் முடித்து சென்னையில் வசித்து வருகிறார். 3வது மகன் முருகன் (வயது 45) திருமணம் முடித்து ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
மேலும் மகள்கள் கற்பகம் (வயது 40), பாக்கியலட்சுமி (வயது 38) ஆகியோர் திருமணம் முடிந்து மதுரையில் வசித்து வருகின்றனர். புலிப்பாண்டி தனது மூத்த மகனான முனுசாமிக்கு மனநிலை சரியில்லாத காரணத்தினால் சொத்துக்களை மற்ற இரண்டு மகன்களுக்கு மட்டும் எழுதிவைத்துள்ளார்.
இதன் காரணமாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முருகன் தான் புதிதாக வாங்கிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை தனது தந்தையிடம் காண்பிக்க தெற்கு பொம்மையாபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார்.
ஸ்கூட்டரை காண்பித்து விட்டு இரவு நேரமாகி விட்டதால் தனது தந்தையின் வீட்டில் தனது மூத்த சகோதரர் முனியசாமியுடன் தங்கியுள்ளார். அவரது தந்தை மற்றொரு வீட்டில் தூங்கியுள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவில் கட்டிலில் தூங்கி கொண்டு இருந்த தனது தம்பி முருகனை, முனியசாமி வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டி படுகொலை செய்து விட்டு, பசுவந்தனை காவல் நிலையத்திற்கு சென்று முனியசாமி சரண் அடைந்து, தனது தம்பியை வெட்டி கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் படுகொலை செய்யப்பட்ட முருகன் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முனியசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் தனக்கு தந்தை சொத்து தரமால் தனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு பிரித்து கொடுத்தது மட்டுமின்றி, சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட முருகன் ஸ்கூட்டர் வாங்கி வந்து தந்தையிடம் காண்பித்தது ஆத்திரத்தினை ஏற்படுத்தியதாகவும், தனக்கு எதுவும் தரமால் மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தது தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என்றும், கொலை செய்யப்பட்ட முருகனிடம் கேட்ட போது, உனக்கு தான் குடும்பம் எதுவும் இல்லை உனக்கு சொத்து எல்லாம் எதுக்கு என்று கூறியதால் ஆத்திரத்தில் இருந்தாகவும், நேற்று முருகன் தனியாக இருந்ததால் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக முனியசாமி தெரிவித்தாக கூறப்படுகிறது.
மேலும் தனது தம்பியை கொலை செய்து விட்டு, குளித்து விட்டு ஹாயாக சென்று முனியசாமி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இதற்கிடையில் சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள முனியசாமியிடம் விசாரணை நடத்தினர்
0
0