பிறந்த கன்றுக்குட்டியை காரில் எடுத்து சென்ற விவசாயி : 2 கி.மீ துரத்தி சென்ற தாய் பசுவின் பாசப் போராட்டம்!!

Author: kavin kumar
5 February 2022, 10:47 pm
Quick Share

சிவகங்கை : கன்றுக்குட்டியை காரில் கொண்டு சென்றதால் 2 கி.மீ. தூரம் தாய்ப்பசு பின்னால் ஓடிய காட்சி பார்த்தவர்களை நெகிழ வைத்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத் தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் பசு கருவுற்று இருந்தது . அந்த பசு மாட்டை மேய்ச்சலுக்காக பொன்னான்குடி பகுதியில் உள்ள வயல்வெளியில் விட்டு இருந்தனர். அப்போது , அந்த பசு மாடு அங்கேயே அழகிய காளை கன்றை ஈன்றது.இதையடுத்து அந்த மாட்டையும், கன்றையும் ஒரு நாள் முழுவதும் அங்கேயே வைத்து பராமரித்தனர். நேற்று முன்தினம் காலையில், அங்கிருந்து தங்களது வீட்டில் உள்ள தொழுவத்திற்கு பசு மற்றும் கன்றுக்குட்டியை கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால், கன்று குட்டியால் நடக்க முடியவில்லை.

இதையடுத்து கார் ஒன்றின் பின்பகுதியில் கன்றுக்குட்டியை தூக்கி வைத்து அங்கிருந்து புறப்பட்டனர். இதை பார்த்த அந்த பசு தனது கன்றுக்குட்டியை வேறு எங்கேயோ ெகாண்டு செல்கின்றனர் என கருதி அந்த காரின் பின்னால் ஓட தொடங்கியது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கன்றுக்குட்டிக்காக காரின் பின்னால் பசு ஓடியது. தனது எஜமானர் வீட்டுக்குத்தான் கன்றுக்குட்டியை கொண்டு செல்கிறார்கள் என்பதை அறியாமல் வீடு வரை அந்த பசு பின்தொடர்ந்து ஓடிவந்தது.

பின்னர் கன்றுக்குட்டியை காரில் இருந்து இறக்கியதும் தாய்ப்பாசத்துடன் அரவணைத்தது.மனிதர்களில் சிலர், குழந்தைகளை கைவிடும் இந்த காலத்தில் 5 அறிவு கொண்ட பசு மாடு, தனது கன்றை பிரித்துவிடுவார்களோ என நினைத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் காரை பின் தொடர்ந்து ஓடிய காட்சி நெகிழ வைத்துள்ளது. தாய்ப்பாசத்துக்கு இணை எதுவுமில்லை என்பதை மெய்ப்பிக்கும் இந்த நிகழ்வை, வீடியோ எடுத்த அந்த பகுதியில் உள்ள சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Views: - 1126

1

0