குடிக்க பணம் கேட்டு தாயை தொல்லை செய்த மகன்…ஆத்திரத்தில் குத்திக் கொன்ற தந்தை: கோவையில் பரபரப்பு..!!

Author: Rajesh
14 March 2022, 1:44 pm
Quick Share

கோவை: குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதி பூங்கா நகர் ஆஞ்சநேயர் கோவில் வீதியில் வசிப்பவர் முகமது ரபிக்(50). இவரது மனைவி உமேரா. இவர்களது மகன் ஷாஜகான்(22). உமேரா தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

ஷாஜகான் ஆட்டோ ஓட்டுனர். மேலும் ஷாஜகானுக்கு அதிக குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்த ஷாஜகான் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது வீட்டில் தூங்கிகொண்டு இருந்த முகமது ரபிக் தனது மகன் ஷாஜகானிடம், ஏன் இப்படி அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறாய், என்று கேட்டதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த முகமது ரபிக், வீட்டில் இருந்த கத்தியை கொண்டு தனது மகன் ஷாஜகானின் வயிற்றுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதியில் இரு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஷாஜகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து முகமது ரபிக் மற்றும் அவரது மனைவி உமேரா ஆகியோர் நேரடியாக துடியலூர் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்து சரணடைந்தனர்.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷாஜகானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து முகமது ரபிக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்த மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 843

0

0