வீட்டை விட்டு வெளியேறிய மனைவி… 4 வயது குழந்தையுடன் தனிமையில் இருந்த கணவன் தேடிய விபரீத முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2022, 9:37 pm
Nagai Sucide - Updatenews360
Quick Share

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து- தீபா தம்பதியினர். தீபாவின் முதல் கணவர் இறந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்துவை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். ‌

இருவருக்கும் பிறந்த ருத்ரா என்ற நான்கு வயதான பெண் குழந்தையோடு மூவரும் வசித்து வந்த நிலையில், கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தீபா கோபித்துக்கொண்டு நன்னிலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் தனிமையிலிருந்த மாரிமுத்து, தனது உறவினர்களுடன் சென்று தீபாவை சமாதானம் பேசி அழைத்து வர நன்னிலம் சென்றுள்ளார்.
ஆனால் தீபா வர மறுப்பு தெரிவித்தால், குழந்தையை மட்டும் தந்தை மாரிமுத்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் தாயை பிரிந்து பிஞ்சு குழந்தை கடந்த 2 நாட்களாக அழுதுக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. தனது பிள்ளை என்றும் பாராமல் பச்சிளம் குழந்தை அழுவதை தொல்லையாக நினைத்த மாரிமுத்து, தீபாவிடம், திருமருகல் கடைத்தெருவுக்கு வருமாறும், அங்கு வந்து குழந்தையை அழைத்து செல்லுமாறும் சொன்னதாக சொல்லப்படுகிறது.

தீபா திருமருகல் வர மறுத்ததால் இருவருக்கும் போனிலேயே வாய் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் மாரிமுத்து அலைபேசி இணைப்பை துண்டித்து உள்ளார்.

பின்னர் தீபா மீண்டும் மாரிமுத்துவை செல்போனில் தொடர்பு கொண்டும் எடுக்காததால், ஆட்டோ மூலம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாரிமுத்து துாக்கில் தொங்கியபடியும், பச்சிளம் குழந்தை மற்றொரு படுக்கை அறையில் இறந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்று, இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை அருகே தம்பதியருக்குள் ஏற்பட்ட தகராறில் 4வயது பெண் குழந்தையை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 494

0

0