ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் திருட்டு மட்டுமே தொழில்… 40 சவரன் நகைகள் மாயமான வழக்கில் பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 9:53 pm
Family Caught - Updatenews360
Quick Share

கோவை : திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பொதுமக்கள் அதிக அளவு கூடும் இடங்களான ரயில் நிலையம் பேருந்து நிலையம் திருவிழாக்கள் மற்றும் பேருந்துகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்காக கோவை வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் காவல் சரக கோவை மாநகர காவல் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருமலையாம்பாளையம் பகுதியை சேர்ந்த திவாகர்(26), கண்ணையா (30), பார்வதி(67) முத்தம்மா(23), கீதா(24) ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஐவர் மீதும் கோவை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த புலன்விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட கோவை ஆர் எஸ் புரம் காவல் சரகர் மாநகர காவல் உதவி ஆணையர் ரவிக்குமார், பி1 பஜார் காவல் நிலைய புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சின்னதுரை, பி2 ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு, பி1 பஜார் புலனாய்வு பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, உமா மற்றும் தலைமை காவலர்கள் கார்த்திக் பூபதி ஆகியோரை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் பாராட்டினார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல்துறை ஆணையர் சந்தீஷ், தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் பொதுமக்களின் உடைமைகளை திருடுவார்கள் தெரிவித்தார்.

பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுதும் பொது இடங்களில் இருக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதேபோல் ரேஸ்கோர்ஸ் மற்றும் சாய்பாபா காலனி காவல் நிலையங்களில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இவர்கள் மீது குண்டர் சட்டம் போட உள்ளதாகவும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்த தனிப்படையை போலீசாரும் பொதுமக்களுடன் பொதுமக்களாக இருந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பார்கள் என தெரிவித்தார்.

மேலும் நாளை சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவில் இரண்டு மூன்று குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.

நாளை நடைபெற உள்ள சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஏற்கனவே 40 கேமராக்கள் இருக்கும் நிலையில் கூடுதலாக 36 கேமராக்கள் பொறுத்தி கண்காணிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

செயின் பறிப்பு சம்பவத்தை தடுக்கும் பொருட்டு தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் பேருந்துகளில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை கண்டறியும் பொருட்டு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து சென்னை மேலிடத்தில் கூறி பேருந்துகளில் கேமராக்கள் பொருத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவ்வாறு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

Views: - 408

0

0