இடைத்தரகர் போல நடித்து ரூ.12 கோடி மதிப்புள்ள சிலைகளை மீட்ட காவலர் : பலநாள் பிளான் போட்ட வலையில் சிக்கிய கொள்ளை கும்பல்..!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2022, 6:17 pm
Statue Arrest - Updatenews360
Quick Share

சிலை வாங்கும் இடைத்தரகர்கள் போல பேசி திருடப்பட்ட ஐந்து சிலைகளை மீட்டு இரண்டு பேரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ளது ரங்கநாயகி அம்மன் கோயில். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயில் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், பாண்டியன் மற்றும் கோயில் பூசாரி ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி, மூவரையும் ஒரு அறையில் அடைத்த மூன்று பேர் கொண்ட கும்பல் இக்கோயிலுக்குச் சொந்தமான 5 சிலைகளையும் திருடிச் சென்றனர். இது குறித்து கோயில் தரப்பில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில், திண்டுக்கல்லில் சிலர் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை விற்பனை செய்ய உள்ளதாக சென்னையைச் சேர்ந்த சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த தலைமைக் காவலர் ராஜேஷ் சிலைகளை வாங்கும் தரகர் போன்று இந்த கும்பலிடம் நீண்ட நாட்களாக பேசிப் பழகி உள்ளார். இதனையடுத்து, இவர்களை நம்பிய சிலை விற்பனையாளர்கள், சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரை அழைத்துச் சென்றனர்.

அப்போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலையைக் காட்டிய ஈஸ்வரன் மற்றும் சேகரன் ஆகியோரை கையும் களவுமாக நேற்று கைது செய்தனர். மேலும், உடன் இருந்த இருவரையும் பிடித்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகரர், பார்வதி ஆகிய 5 சிலைகளை மீட்டனர்.

இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிலையைக் கடத்தியவர்கள் சிலைகளை விற்பதற்காக கொடுத்துச் சென்றதும், அவற்றை இவர்கள் விற்கும்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டதும் தெரியவந்தது.

இச்சிலைகள் தொன்மையானவை இல்லை என்றாலும் விலை உயர்ந்தவையாக கருதப்படுகிறது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 12 கோடி வரை இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இக்கும்பலுடன் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா? இவர்களது செயல்பாடு என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 446

0

0